31 May 2008

எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்!

|0 comments
பெட்ரோல் விலை ஏறப்போகுதேன்னு கவலையா..! உங்களைத்தான் தேடிட்டு இருக்கோம்.


ஒரு சிம்பிள் கணக்கு சொல்றோம், கேளுங்க! இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா? சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய்! ஆஃப்டர் ஷேவ் லோஷன் 100 மில்லி பாட்டில் 175 ரூபா, ஒரு லிட்டர் 1,750 ரூபாய்.


எதுக்கு இப்போ இந்தக் கணக்கெல்லாம்னு கேக்கறீங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... டெட்டால், ஷாம்பு, மவுத்வாஷ், ஆஃப்டர் ஷேவ் லோஷன்னு எதையாவது போட்டால் தான் நம்ம பைக், கார்லாம் ஓடும்னு இருந்தா, நம்ம நிலைமை என்ன ஆகுறது..?!


நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் பைக், கார் ஓட்டுறதுக் காகவே பெட்ரோலும், டீசலும் படைச்ச இயற்கையோட கருணை எவ்வளவு பெருசுனு இப்பப் புரியுதா..!


ஹ¨ம்... என்ன பண்ணச் சொல் றீங்க? பெட்ரோல் டென்ஷனைக் குறைக்கிறதுக்காக இப்படியெல்லாம் அசட்டு மெயில்களை அனுப்பி ஆறுதல்பட்டுக்க வேண்டியதாயிருக்கு! நம்ம இன்டர்நெட் நண்பர்கள் இதை நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் அனுப்பியிருப்பாங்களோ? அப்ப அவருக்கு வேலை மிச்சம். இதை வெச்சே அடுத்த மூணு மாசம் ஓட்டிடுவார்!


ஜோக் இருக்கட்டும்... இதற்கு மேலும் இந்திய எண்ணெய் நிறுவ னங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இத்தனை வருடங்களாக மானியமாக அளித்து வந்த லட்சம் கோடிகளால் முழி பிதுங்கி நிற்கின்றன இந்திய எண்ணெய் நிறுவனங்கள்! எரிகிற தீயில் பெட்ரோல் ஊத்துற கதையாக சர்வதேசச் சந்தையிலும் கச்சா எண்ணெயின் விலை எகிடு தகிடாக உயர்ந்துகொண்டு இருக்கிறது! ஆசிய நாடுகளில் அதிக அளவு எரி பொருள் செலவழிப்பதில் இந்தியா வுக்கு மூன்றாவது இடம். இத்தனை வளமான வாடிக்கையாளராக இருந் தாலும், 'ஐயா! எங்க நாட்டுல தேர் தல் வருது. கொஞ்ச நாள் பெட்ரோல் விலை ஏறாம பார்த்துக்குங்க!' போன்ற கோரிக்கைகள் எல்லாம் சர்வதேசச் சந்தையில் எடுபடாது.


சொல்லப் போனால், சர்வதேசச் சந்தை கிட்டத்தட்ட தீப்பிடித்து எரிகிறது. ஒரு வருடத்துக்குள்ளாக இரண்டு மடங்கு விலை உயர்ந்து, 133 டாலருக்கு மேல் தந்தியடிக்கிறது ஒரு பேரல் குரூட் ஆயில். இது இன்ன மும் உயரலாம் என்று 'நல்ல' சேதி சொல்கிறார் 'ஓபெக்' அமைப்பின் தலைமை நிர்வாகி. நாடு விட்டு நாடு பாயும் எண்ணெய்க் குழாய் களை தீவிரவாதிகள் வெடி வைத்துத் தகர்ப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதுமாக எண்ணெய் விலையேற்றத்துக்கான காரணங் களை அடுக்கிக்கொண்டே போகிறார் கள். இதையெல்லாம் தாண்டி, வளரும் நாடுகளை முடக்கிப்போட வளர்ந்துவிட்ட நாடு எதுவும் சதி செய்கிறதா என்றுகூட விவரமான சிலர் யோசிக்கிறார்கள்!


இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு லிட்டருக்குக் கிட்டத்தட்ட 17 ரூபாய் வரை மானியம் அளிக்கின் றன நமது எண்ணெய் நிறுவனங்கள். அதை நீக்கச் சொல்லித்தான் அவர் கள் போராடுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அசல் விலையைக் கொடுத்து மக்கள் பெட்ரோல் வாங் கட்டும் என்பது அவர்களது வாதம். 'நாங்க முதல்ல ஓட்டு வாங்கிக்கி றோம்! அப்புறம் அவங்க அசல் விலைக்குப் பெட்ரோல் வாங்கட்டும்!' என்பது ஆளும் காங்கிரஸின் நிலை. 'இப்படியே அசட்டையா இருந்தீங்கன்னா இன்னமும் பொரு ளாதாரச் சிக்கல் தீவிரம் அடையும்!' என்பது பொருளாதாரப் புலிகளின் புலம்பல்.


எதுக்கும் உடனடியா நாம ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வெச்சுக்குறது நல்லது. சிக்கனத்துக்கு சிக்கனம்; ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்! அப்புறம், சைக்கிளுக்கும் டிமாண்ட் ஏகமா எகிறிடுங்கோ!

நன்றி, விகடன்.

30 May 2008

டொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்

|9 comments
அமிதாப்பச்சன் துவங்கியுள்ள இணையதளத்தின் பெயர் அபிதாப்பச்சன்.காம் என்று நினைத்திருந்தீர்கள் என்றால் அது தவறு. அல்லது அமிதாப்பச்சன்.இன் என்றோ அல்லது அமிதாப்பச்சன்.நெட் என்றோ நினைத்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இந்த முகவரிகள் வேறு ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே.

சல்மான்கான், ரஜினிகாந்‌த், க‌‌‌ரீனா கபூர், ஹிருதிக் ரோஷன் ஆகியோருக்கு தங்கள் சொந்த டொமைன் பெயரில் இணையங்கள் இல்லை. ஆன் லைன் பிராண்ட் குறித்து சிந்திக்கையில் இவர்கள் போன்ற பிரபலமானவர்கள் மட்டுமல்ல, முதன்மை நிறுவனங்களான டாடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்து நாளிதழ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியோரது டொமைன் பெயர்களும் சந்தர்ப்பவாத ஏமாற்றுபேர்வழிகளால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது ஆன் லைன் முகவரி அடையாளத்தை திரும்பப் பெற கடுமையான நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டிவரும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.

அதாவது தங்களுக்கு வணிகமுத்திரை உரிமைகள் இல்லாத பெயர்களில் இணையதள முகவரிகளை பதிவு செய்யும் ஏமாற்றுக்காரர்களின் வேலைதான் இது. அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம் உருவாக்கி அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவது, அல்லது பிற்காலத்தில் இந்த டொமைன் பெயர்களை கடுமையான விலைக்கு விற்று பணம் செய்வது இதுவே இவர்களது பல குறிக்கோள்களில் முதன்மையானது.

மேலும் மோசமான கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் ஆபாச நடவடிக்கைகளுக்கும் கூட இந்த முகவரிகளை பயன்படுத்தலாம். அதாவது கடவுச் சொல்லைதிருடி வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியாகக் கூட இவை நடைபெறலாம்.

இந்திய ஸ்டேட் வங்கி இவர்களிடமிருந்து முதல் பாடத்தை கற்றுள்ளது. அதாவது ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் எஸ்பிஐகார்ட்ஸ்.காம் என்ற போலி இணைய தளத்தை துவங்கினார். அதாவது அதனை உண்மையான எஸ்.பி.ஐ. இணையம் போலவே வடிவமைத்தார். இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் கூட ஏமாந்து விளம்பரங்களை அதில் கொடுத்துள்ளன. உதாரணமாக சேஸ் மான்ஹாட்டன் வங்கி இந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது.
இன்னொரு வழியையும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இது "டைபோ ஸ்க்வாட்டிங்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது உதரணமாக ஹூண்டாய், பெப்சி, அல்லது கோககோலா ஆகிய பெயர்களில் உள்ள ஸ்பெல்லிங்கை சற்றே சிதைத்து அல்லது மாற்றி டொமைன் பெயர்களை பதிவு செய்வது. இதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு தொகை என்று விளம்பர வருவாய் ஈட்டலாம்.

இதில் குறிப்பாக மிகவும் பிரபலமடைந்துள்ள டொமைன் பெயர்களில் டாட் காம், டாட் நெட் போன்று டாட் சிஎம் என்ற ஒன்று உள்ளது. இது கேமரூனுக்கு உரித்தான டொமைன் பெயர், சைபர் ஸ்க்வாட்டிங்கிற்கும் பெயர் போனது. உதாரணமாக கூகுள்.சிஎம் என்று அடித்தால் ஏகப்பட்ட மோசடி இணைப்புகளுக்கு அது இட்டுச் செல்லும். ஆனால் சில கம்பெனிகள் சாமர்த்தியமாக தங்கள் டொமைன் பெயர்களிலேயே சிஎம் என்பதனை சேர்த்து அந்த இணைப்புகளிலிருந்து தங்கள் நிறுவனத்தின் அசல் இணையதளத்திற்கு இட்டுச் செல்லுமாறு செய்துள்ளனர்.

இதனை தடுக்க வியாபார நிறுவனங்கள் அந்த நாட்டிற்குறிய டொமைன் பெயரை தேர்ந்தெடுக்கவும். அதாவது இந்தியாவிற்கு டாட் இன் என்று பதிவு செய்யவேண்டும். ஆனால் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இதனை செய்ய தவறி விடுகின்றன. இந்தியாவில் வர்த்தகம் புரியவேண்டும் எனும்போது மட்டும் இதனை யோசிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய இணையதளம் துவங்கும்போது அந்த பெயரில் ஏற்கனவே சைபர் ஸ்க்வாட்டர் ஒருவர் டொமைன் பெயரை பதிவு செய்திருப்பார். உதாரணமாக பிரபல வெப் 2.0 வலைப்பதிவுத் தளமான டெக்கிரன்ச் நிறுவனத்தின் இந்திய முகவரி கொண்ட டெக் கிரன்ச்.இன் என்பது சென்னையில் உள்ள மென்பொருள் துறைச் சேர்ந்த ஒருவருடையது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதனை தடுக்க சில ஆன் லைன் சேவை நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக சிட்டிசன் ஹாக்.காம் உங்களுக்கு தேவையான டொமைன் பெயரின் ஸ்பெல்லிங்கை சிதைத்து உங்களுக்காக இணையதளத்தை பதிவு செய்ய உதவி புரிகிறது. அல்லது இந்த பெயர் ஏற்கனவே ஸ்காவாட்டர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், உங்கள் முகவரியை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் மீட்டுக் கொடுக்கிறது. இது சிறந்த போர்த் தந்திரம் என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதானே.

யார் சொன்னது??? "ஆம்பிளைன்னா அழக் கூடாது..." என்று???

|0 comments
ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.


'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்த என் பாட்டி, திடீரென்று மரணம் அடைந்து விட்டார். எப்போதும் ஒரு வித மெல்லிய புன்னகையை மட்டுமே இதழ்களில் தவழ விடும் என் அப்பா, ஓவென்று கதறி அழுத காட்சியை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவ்வப்போது பாட்டியைப் பற்றி என்னிடம் (எனக்குப் புரியாது என்ற தைரியத்தில்) குறை சொல்லி புலம்பித் தள்ளும் அம்மாவும் கூட கண்ணீர்க் கடலில் மூழ்கியிருந்தார்.


ஆனால், என் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. நான் வர விடவில்லை. 'பாட்டி!' என்று என் உள்ளம் பதைபதைக்கும்போதெல்லாம், 'ஆண் பிள்ளை அழக் கூடாது.. ஆண் பிள்ளை அழக் கூடாது' என்று கிளிப்பிள்ளை போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.


ஒரே பேரன் என்ற முறையில் அரிசியிடுதல் முதல் கொள்ளியிடுதல் வரை என்னைத்தான் கை பிடித்துச் செய்ய வைத்தார்கள். அப்போதும் கூட அழுதுவிடக் கூடாது என்ற தவிப்பும் இறுக்கமும்தான் எனக்குள் இருந்ததே தவிர, பாட்டி பற்றிய நினைவுகள் துளியும் இல்லை.


இரண்டு நாட்கள் கடந்தது. எங்கள் உறவினர்களில் பாட்டியின் இறப்புக்கு வர முடியாத மூதாட்டி ஒருவர் ஊரில் இருந்து வந்திருந்தார். "அவ சாவுல கூட இவன் அழலையா" என்று ஆச்சர்யமான அவர், "அழக்கூட தெரியாத இந்தப் பிஞ்சுப் பிள்ளையை விட்டுப் போக உனக்கு எப்படியம்மா மனசு வந்துச்சு!" என்று ஆரம்பித்தார். அநேகமாக அவர் என் பாட்டியின் சக வயது தோழியாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் பற்றி, பாட்டி பற்றி, ஏன்.. என்னைப் பற்றி கூட அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.


"குடும்பத்துக்கு ஒரே வாரிசு.. இவன் முகத்தைப் பார்த்துத்தான் உயிரைப் புடிச்சுக்கிட்டுக் கெடக்கேன்னு சொல்லுவாளே.. இப்போ இந்த முகத்தை அலங்கரிச்சுப் பார்க்க அவ இல்லையே" என்றெல்லாம் என்னை கட்டிக் கொண்டு அவர் அழவும் எனக்குள் ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.


அம்மாவையும் அப்பாவையும் அதட்டும் சக்தியாக.. எனக்கு மட்டும் பூனைக் குட்டியாக.. திகட்டத் திகட்ட பாசம் வார்த்த ஒரு ஜீவனின் இழப்பு எனக்கு அப்போதுதான் உறைத்தது.


என் மழலைப் பொய்களுக்கு புருவம் உயர்த்திய ஒரே நபர் பாட்டிதான். என் உறக்கத்துக்காகவே புதுப்புது 'சிங்கம் கதை'களுக்கு சிருஷ்டி கர்த்தாவானவர் அவர். என் ஐஸ்கிரீம் செலவுகளுக்கென தாத்தாவின் போட்டோவுக்குப் பின்னால், வங்கி நடத்தியவர். 'டாக்டர் ஆகு.. என்ஜினீயராகு..' என்ற பெற்றோரின் குரல்களுக்கு மத்தியில், 'ரொம்ப படிச்சா மூளை குழம்பிடும்' என்றபடி, முந்தானையால் என் முகம் துடைத்தவர்.


அந்த இடுங்கிய கண்களின் இணக்கம்..


முன் பற்கள் இல்லாத அந்த இதழ்களின் எச்சில் முத்தம்..


அய்யோ பாட்டி!


நான் அழுதுவிட்டேன். உறவினர் விக்கித்துப் போக, அம்மாவும் அப்பாவும் பிரம்மித்து நிற்க, யார் சொல்லுக்கும் அடங்காமல் நான் அழுது கொண்டே இருந்தேன். என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை உலகுக்கே உரக்கச் சொல்லிவிட்டதாக ஒரு உணர்வு வந்தது. அமைதி வந்தது. நிம்மதி வந்தது.


அன்றிலிருந்து இன்று வரை இயல்பான உணர்ச்சிகள் எதையும் நான் மறைத்ததில்லை. சிரிப்பும் அழுகையும் எல்லா மனிதர்களுக்கும் பொது. ஆண் பெண்பேதமெல்லாம் அதில் கிடையாது என்பதை திடமாக நம்பினேன். எனக்கும் ஒரு மகன் பிறந்த போது, நான் அவனுக்குச் சொல்லி வளர்த்த முதல் அறிவுரை இதுதான்.. 'எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்ணீரை வெளிப்படுத்தத் துணிபவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!'

சந்திரன், புனே


நன்றி, விகடன்.

29 May 2008

இந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும்

|0 comments
இந்தியாவில், பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வைரத்தின் விலை 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வைர ஏற்றுமதியாளர் சஞ்சய் ஷா கூறுகையில், இந்தியாவில் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் வைர வர்த்தக கழகம், பட்டை தீட்டப்படாத வைரத்தின் விலையை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், எனவே, வைரத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில், அமெரிக்காதான், அதிக அளவு வைரங்களை இறக்குமதி செய்வதாகவும், அங்கு, தற்போது பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வைரம் இறக்குமதி செய்வதை தற்போது அமெரிக்கா பெருமளவு குறைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். எனவே, இந்திய வைரத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாகவே, பட்டை தீட்டப்படாத வைர உற்பத்தி செலவு, அதிகரித்து வருவதாகவும், கடந்த ஒராண்டில் மட்டும், 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

28 May 2008

கூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்

|2 comments
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.


""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கர்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''


இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.


லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.


கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது


நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?


கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

நன்றி, தயாளன்.

27 May 2008

பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!

|0 comments
இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.

இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.

வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.

பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்.

பாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிடம்

|1 comments

நாட்டின் பங்கு சந்தையில், சிறந்த சேமிப்பு முறைகளில், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முன்னணியில் இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜேபிமார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தலைவர் கோஷ் கூறுகையில், பங்குச் சந்தை முதலீட்டு நடைமுறைகள் பற்றி விபரங்கள் தெரிவதில்லை என்று கூறினார். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற பலரும் விரும்புவதாகவும், ஆனால், அவர்களுக்கு பங்குசந்தை முதலீட்டில் ஏற்படும் பாதிப்புகளில் அனுபவம் இல்லாததால். நஷ்டத்தை அடைவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, சேமிப்பு என்ற வகையில், பணத்தைப் பாதுகாக்க விரும்புவோர், வங்கி டெபாசிட், தங்கம் போன்றவற்றைவிட, அதிக லாபம் தரும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.. குறைந்த கட்டணத்தில், மியூச்சுவல் பண்ட் நிறுவன திட்ட மேலாளர்களின் முதலீடு அறிவு, மற்றும் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறலாம் என்றும் நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

26 May 2008

மதுரை...

|0 comments
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.



மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவான். அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்
மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.



பழமுதிர்ச்சோலை
அழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.



திருமலைநாயக்கர் மகால்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது. திருமலை நாயக்கர் கட்டிய இம்மகாலின் பழைய வடிவம் இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமானது என்பதும் கூடுதலான ஒரு ஆச்சரியத்தகவல்.



திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் இங்கு முருகனுக்கு அரோகரா சரணகோஷம்தான்.



இவற்றுடன் கூடல் அழகர் கோவில், கோச்சடை அய்யனார் கோவில், ஷ்ரீஅரவிந்தர் அன்னை தியான மண்டபம், திருமோகுர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், ராமகிருஷ்ண மடம் என பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் முளைப்பாரி விழாவும் மதுரையில் பிரசித்தம்.



உணவு, தங்குமிடம், போக்குவரத்து
தமிழக பாரம்பரிய உணவு வகைகளை மதுரையில் ஒரு பிடிபிடிக்கலாம். மல்லிப்பூ இட்லி (ரொம்பவே மிருதுவானது), சாம்பார், பலவகைச்சட்னி மதுரையின் தனி ருசி. தங்குமிடங்களை பொறுத்த வரை அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற ஹோட்டல்கள் உள்ளன. விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளதால் எந்தப்பகுதியில் இருந்தும் மதுரைக்கு வந்து விடலாம். அழகான சாலை வசதியும் உண்டு. சென்னையில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ளது.



யப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே...ங்கிறீங்களா. போடுங்க மதுரைக்கு ஒரு விசிட்டை.

25 May 2008

அரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது

|1 comments
நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.

கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன் வழங்குகிறது.

கண்பார்வை இழப்புத் தடுப்பு, குறைந்த விலையில் லென்ஸ் தயாரிப்பு, மருத்துவமனை நிர்வாகம் குறித்த பயிற்சி ஆகியவற்றி்ல் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாட்டை பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் 10 லட்சம் டாலர் நிதியும் பரிசாக வழங்கப்படும். வரும் 29ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் விழாவில், பில்கேட்ஸின் தந்தை இந்த விருதை அரவிந்த் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமியிடம் வழங்கவுள்ளார்.

24 May 2008

பைக் ஓட்ட 10 கட்டளைகள்!

|1 comments
1மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!

எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!

ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க முடியும். வேகமாகச் செல்லும் பைக்கில் பிரேக்கை உபயோகிக்கும்போது, சக்தியைப் பெருமளவில் விரயம் செய்கிறோம். வளைவுகளை முன்கூட்டியே கவனித்துச் சென்றால், பிரேக்கை உபயோகிக்காமல் செல்ல முடியும்.

3கிளட்ச்சைக் கைவிடு!

தேவையில்லாமல் கிளட்ச்சோடு பின்னிப் பிணைந்து, அதைப் பிடித்துக்கொண்டே பைக் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். இந்தப் பழக்கம் பெட்ரோலைக் குடித்துவிடும்.

4ஏர் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்!

இன்ஜின் மூச்சு விடுவதற்குக் காற்றை அனுப்புவது, இந்த ஏர் பில்டர்தான். தூசு துரும்புகள் இன்ஜின் பாகங்களை சீக்கிரம் தேய்மானத்துக்கு உட்படுத்தும். அதோடு, தூசு புகுவதால் ஏற்படும் கார்பன் படிவம் சைலன்ஸரை அடைத்துக்கொண்டு, இன்ஜினை திணற வைக்கும். இதனால், பைக் பர்பாமென்ஸ் பாதிக்கப்படும்.

5டயரின் காற்றழுத்தத்தை சோதியுங்கள்!

காற்றுக் குறைவான டயர்களால் பெட்ரோல் தேவை அதிகமாகிறது. 25 சதவிகிதம் காற்றுக் குறைவான டயர்களால், 5 சதவிகிதம் அதிக எரிபொருள் தேவையும், டயர்களின் ஆயுட்காலம் 25 சதவிகிதம் குறைவதும் ஏற்படும். அதே போல், தேய்ந்துபோன டயர்களாலும் பெட்ரோல் விரயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6பெட்ரோல் லீக் ஆவதைச் சோதியுங்கள்!

பைக்கின் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் ப்யூல் லைன் (Fuel Line) என பெட்ரோல் பயணிக்கும் அத்தனை இடத்தையும் சரிவரச் சோதியுங்கள். ஒவ்வொரு துளியாக வடிந்தால்கூட ஒரு நாளைக்கு 5 1/2 லிட்டர் எரிபொருள் விரயமாகிவிடும்!

7சிக்னல்களில் இன்ஜினை ஆப் செய்யுங்கள்!

ஐடியலில் பெட்ரோல் பெருமளவு விரயமாகும். ரயில்வே கேட், போக்குவரத்து நெரிசல், சிக்னல்கள் ஆகியவற்றைக் கடக் கும்போது பைக்கை ஆப் செய்து எரிபொருளைச் சேமியுங்கள்.

8இன்ஜினை நல்ல கண்டிஷனில் வைக்கவும்!

அவ்வப்போது இன்ஜினைச் சரியாக டியூன் செய்துகொண்டால், 6 சதவிகிதம் வரை பெட்ரோலைச் சேமிக்கலாம். பைக்கில் அதிகப் புகை வெளியானாலோ, இழுவைத் திறன் குறைந்தாலோ, உடனடியாக சர்வீஸ் சென்டருக்குப்போய் இன்ஜினைச் சோதியுங்கள்!

9பேட்டரியை அவ்வப்போது சோதியுங்கள்!

எலெக்ட்ரிகல் உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். எனவே, ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கிப் பொருத்துங்கள்.

10அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்!

உங்கள் பைக்கின் முக்கியச் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கும் வாகனத்துக்கும் நன்மை பயக்கும்!


--நன்றி விகடன்

ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்

|8 comments
நண்பர் திரு.கண்ணன்பாபு அவர்கள் எனது BLOGயை பாராட்டியும் ஆன்லைன் பேங்க்ல் நடந்த மோசடி பற்றி ஒரு Forward ஈமெயில்ம் அனுப்பியிருந்தார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்



திரு.ரமேஷ்விஸ்வநாதன் அவர்களுக்கு இன்டர்நெட் ஆன்லைன் பண பரிமாற்றத்தில் நடந்த ஒரு கசப்பான அனுபவம்....



இவர் பணி புரியும் அலுவலக்திலிருந்து ஒரு வருடத்திற்க்காக ஆஸ்திரேலியவிற்கு அனுப்பப்பட்டுள்ளர். இவரும் அனைத்து Software குடிமகன்களை போல ஒரு வருடத்தில் 10 முதல் 20 லட்சங்களை சேமித்து பின்பு இந்தியாவி்ல் ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற கனவுடன் சென்றுள்ளார். அங்கே அவரது அலுவலக ரூல்ஸ் படி ஒரு Salary Account ANZ Bankல் தொடங்கியுள்ளார். ஆறு மாதங்களுக்கு பிறகு பத்தாயிரம் ஆஸ்திரேலிய டாலர் சேர்ந்த உடன் ஒரு லேப்டாப்யை வாங்க நினைத்தார். அங்கேதான் அவருக்கு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.



அவரது அலுவலக கணினிலிருந்து ஆஸ்திரேலிய டெல் நிறுவனத்தின் வெப்சைட்டிறிக்கு சென்று அங்கே பல்வேறு பணம் செலுத்தம் முறையில் இவரிடம் கிரெடிட் கார்டு மற்றும் காசோலை இல்லாத காரணத்தால் ஆன்லைன் மணி டிரன்ஸ்பர் முறையை தேர்ந்தெடுத்துள்ளார். அங்கே அவரது பெயர் முகவரி மற்றும் பிற தகவல்களை கொடுத்து Enter பட்டனை அழுத்தியுடன் அங்கே ஆஸ்திரேலிய வங்கி பக்கத்தை பார்ப்பதற்கு பதில் அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கிரெடிட் கார்டு authorisation பக்கம் தெரிந்துள்ளது. அங்கே கிரெடிட் கார்டு எண்ணிற்கு பதிலாக அவருடய முகவரி இருந்துள்ளது. இவ்வாறு தவறுதலாக வந்துள்ளதால் அவர் BACK பட்டனை அழுத்தி (அவர் செய்த மிகபெரிய தவறு) மீண்டும் அவருடிய தகவல்களை கொடுத்து (இங்கே அவருடிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டன) லேப்டாப் தொகையை செலுத்திவிட்டார்.



ஆஸ்திரேலியாவில் உள்ள டெல் நிறுவனம் இவரது பணத்தை பெற்றுக்கொண்டு லேப்டாப்யை டெலிவரி செய்தது. இவரும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நினைத்துள்ளார்...



ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் தொலைபேசியில் ஒரு பெண் "நீங்கள் நேதர்லண்டில் யாருக்காவது donation செய்துள்ளேர்களா?" என்று பெங்களூர்ல் இருந்து ANZ பங்கின் சார்பாக பேசுவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டவுடன் அதிரிச்சி அடைந்தார். அவரை உடனடியாக ANZ பேங்க் தளத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார் அவருடய பேங்க் அக்கவுன்ட்ல் மூன்று இன்டர்நேஷனல் Fund transfer 5000, 2000, 1000 ஆஸ்திரேலிய டாலர்கள் நேதர்லண்டில் உள்ள அக்கவுன்ட்ற்கு மாற்றப்பட்டுள்ளது. பேங்க் Accountல் 10000/- ஆஸ்திரேலிய டாலர்கள் உள்ள ஒரு இந்திய பெயர் கொண்ட ஒருவர் Donation கொடுக்க வாய்ப்பு இல்லாததால் சந்தேகம் அடைந்து அவருக்கு கால் செய்ததாக கூரியுள்ளார்.



அவர் அவளுக்கு நன்றி கூறி அனைத்து Transactionகளையும் நிறுத்துமாறு கூறியுள்ளர். ஆனால் அவள் ஏற்கனவே 2000 ஆஸ்திரேலிய டாலர்கள் சென்று விட்டதாகவும் மற்றவற்றை நிறுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இதை பற்றி ANZ Bankற்கு தெரியப்படுத்தி மேலும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல விதமான மன உளைச்சலுக்கு பிறகு அவருடைய பணம் கிடைத்துள்ளது.



பெங்களூர்ல் உள்ள அந்த Bank ஏஜென்ட் மாற்ற இரண்டு Transactionயை நிறுத்தாமல் இருந்திருந்தால் அவர் அவருடய அக்கௌன்ட்ல் பணம் எதுவும் இல்லாமல் தான் இருந்திருப்பார்.



ஆன்லைன் பண பரிமாற்ற முறையில் நாம் தான் மிகவும் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். இபோதுள்ள ஆன்லைன் Bankல் எனக்கு தெரிந்தவரை ICICI வெப்சைட் மிக்க பாதுகாப்பானதாக கருதுகிறேன். அதிலும் இபோதுதான் passwordயை டைப் செய்ய Virtual Keyboard முறையை அறிமுகம் செய்துள்ளனர். (Transaction password யை டைப் செய்யும் பொழுது Virtual Keyboard வருவதில்லை).



மேலும் ஆன்லைன்ல் பாதுகாப்பான பண பரிமாற்றம் செய்ய கிளிக்குங்கள்.



குறிப்பு:முழுக்க முழுக்க என்னால் டைப் செய்யப்பட்டு உங்களுக்கு கொடுக்கும் என் முதல் பதிவு.

23 May 2008

சலாம் ஜெய்ப்பூர்!

|0 comments
தீவிரவாதிகள் 12 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து ஏழு வெடிகுண்டுகளை ஜெய்ப்பூரில் வெடிக்கச் செய்தாலும் இறுதியில் ஜெயித்தது ஜெய்ப்பூர்வாசிகளே! முதல் குண்டு வெடித்தது, ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற ஹனுமன் கோயில் அருகில். அடுத்தடுத்து குண்டு வெடித்த இடங்கள் அனைத்தும் இந்து மதத்தினர் அதிகமாகப் புழங்கும் இடங்களில்! குண்டுகள் வெடித்த வேகத்தில் இந்துமுஸ்லிம் மக்கள் வெறிகொண்டு, வெடிகுண்டுகளைக் காட்டிலும் வேகத்தோடு மோதிக்கொள்வார்கள் என்பது தீவிரவாதிகளின் கணக்கு. ஆனால், வெடிகுண்டு நெருப்புக்கும், தீவிரவாதிகளின் கணக்குக்கும் ஒரு சேர தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார்கள் ஜெய்ப்பூர் மக்கள்.

ஜெய்ப்பூருக்கு இது புதுசு! வெடிகுண்டுகள் வெடித்தவுடன், பழக்கம் இல்லாததால், 'காயம் அடைந்தவர்களுக்கு உதவவேண்டும்' என்பதைத் தவிர, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
சாதாரண சைக்கிள்களை வைத்துக்கொண்டு படு ஹைடெக்காக குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் அந்த 'மூளை யுள்ள முட்டாள்கள்'! பத்து சைக்கிள்களை விலைக்கு வாங்கி செல்போன், டைம்பீஸ் மூலமே குண்டுகளை இயக்கிய அந்த இம்சை இயக்கத்தவர்கள், இந்தத் திட்டத்தைக் கச்சிதமாக பிளான் செய்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே! 'இந்தியன் முஜாகிதீன் கள்' என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். குண்டுகள் வெடித்த ஆரம்ப அதிர்வுகள் அடங்கிய பிறகு, 'ஏன் குண்டுவைத்தோம்' என்று தங்கள் தரப்பு விளக்கமாக அவர்கள் அனுப்பிய இமெயில் கடிதம் ஒரு மாதத்துக்குமுன்னரே தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பக்கா பிளானோடு செயல்பட்டு இருக்கிறார்கள்!


காவல் துறையினர் வழக்கம் போல வழவழாதான்! எட்டு மாதங்களுக்கு முன்பே, 'ஹிட் லிஸ்ட்'டில் இருக்கிறது ஜெய்ப்பூர் என்ற துப்பு கிடைத்தும், துப்புர வாக விசாரிக்காமல் விட்டார்கள். எந்த அதிரடி நடவடிக்கைகளும் எடுக்க வழியில்லாமல், 'குற்ற வாளிகளாக இருக்கலாம்!' என்ற சந்தேகத்துடன் சில படங்களை கம்ப்யூட்டரில் வரைந்து காட்டி, அவை சரியில்லாமல், 'மீண்டும் சரியாக வரைந்து தரச் சொல் கிறோம்!' என்று வாபஸ் வாங்கி யுள்ளது ஜெய்ப்பூர் போலீஸ்! தீவிரவாதிகள் அனுப்பிய வீடியோ டேப்பில் டிரெயின் ஓடும் சத்தம் கேட்கிறது என்று இப்போது ஜெய்ப்பூரில் ஓடும் ரயில்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டு இருக் கிறார்கள் போலீஸார்!


'இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவுப் பேச்சு வார்த்தைகளைச் சீர்குலைப்பதற் கென்றே இந்த சதிச் செயலை தீவிரவாத நாச சக்திகள் அரங் கேற்றியுள்ளன!' என்று வழக்கம் போல் நமது பிரதமர் கடிந்து கொண்டுள்ளார். ஒருவேளை பாகிஸ்தானில் இருந்து செயல் படும் 'லஷ்கர்இதொய்பா' தீவிரவாத அமைப்புதான் இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமோ என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருக்க, 'ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளை நாங்கள் கண்டிக்கிறோம். அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதால் இவர்களுக்கு என்ன பயன்!' என்று கரிசன மாக(!) கண்டனம் தெரிவித்துள்ளது லஷ்கர்-இ-தொய்பா!


ஜெய்ப்பூரில் 'சைக்கிள் பாம்' வெடித்ததற்குப் பின்பு, உத்தரப் பிரதேசத்தில் வேடிக்கையாக ஒரு சட்டம் போட்டிருக்கிறது மாயாவதி அரசாங்கம். இனி, ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் தான் உத்தரப்பிரதேசத்தில் புது சைக்கிள் வாங்க முடியுமாம்!


பொறுமையின் சிகரமாகப் பொதுமக்களும், விசாரணை வேங்கைகளாக போலீசும் இருக்கும் வரையில் இந்தியன் முஜாகிதீன், தமிழன் முஜாகிதீன், அண்ணா சாலை முஜாகிதீன் என வரிசையாகத் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்!


-- நன்றி விகடன்.

22 May 2008

இனிமையான கனவுகள் காணுங்கள்

|0 comments

கனவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.




ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக்கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற்கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.



நள்ளிரவில் காணும் கனவு ஓராண்டுக்குள் பலிக்கும், விடியல் நேரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக்காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த்தால், திருமணம் நடந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித்துள்ளோம். பொதுவாக கனவுகள் கருப்பு - வெள்ளைகளாகத்தான் இருக்கும். கண் பார்வை குறைபாடு இருப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் இருக்காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இருக்கும்.‌ பூனைகளும் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை. கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ணங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன. நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப்பதே கனவு எனப்படுகிறது. நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்பதில்லை. புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இருக்கலாம். ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண்டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம். உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசைபோட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமையான கனவுகளை காணலாம். மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்டபடியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.



இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு.அதற்காக இத்துடன் முடித்து விடுகிறோம். கனவுகள் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை அளிக்கலாம்.

21 May 2008

சாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ஒரு கட்டுரை...

|1 comments
கைநிறைய சம்பளம், நினைச்சா வெளிநாட்டுப்பயணம், குளு குளு அலுவலகம், நுனிநாக்கு ஆங்கிலம், சொகுசான வாழ்க்கை... இதுதான் ஐ.டி. துறை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை கசப்பானது. ஐ.டி. துறையால் நம் நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நாம் அதற்குக் கொடுத்த விலை சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. ஐ.டி. நுழைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சமூகமாற்றங்களே. அதிலும் சிதைந்துவரும் குடும்ப உறவுகள், அதிகரித்துவரும் விவாகரத்துகள், அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள், சிதைந்து வரும் தனிநபர் வாழ்க்கை, வேலைநிரந்தரமின்மை, அந்நிய வாழ்க்கைமுறைகளான 'லிவிங் டுகெதர்', 'டிஸ்கொதே,' நுகர்வு கலாசாரம், குடி மற்றும் 'வீக் எண்ட்' கொண்டாட்டங்கள். அதில், போதைப் பொருட்களை உபயோகிப்பது ஆகியவை தற்பொழுது அதிகமாகியிருக்கிறது.


குடும்ப உறவுகளின் சிதைவுக்குக் காரணம், தம்பதிகள் சந்திக்கும் நேரம் மிகக்குறைவு - புரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு. மற்றொரு காரணம் இருவருக்கும் இடையே ஏற்படும் நானா, நீயா மனப்பான்மை. ஊடகங்கள் பெண்ணுரிமையைத் தவறான வடிவில் பெண்களுக்குக் கற்பித்தது, பெற்றோர்களும் அறியாமை காரணமாக, 'சின்னஞ்சிறுசுங்க தனியா இருக்கட்டும்' என்று, புதிதாகத் திருமணமானவர்களை அருகிலிருந்து நெறிப்படுத்தத் தவறுகின்றனர். அவர்கள் அதை உணர்ந்து சரிசெய்ய முயலும்போது காலம் கடந்துவிடுகிறது.



அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள் ஏற்படக் காரணம், பெரும்பாலும் நம் பிரச்னைகளுக்கு செவிசாய்க்க வீட்டில் உள்ளவர்களுக்கு நேரமின்மை, சக அலுவலர்கள் காட்டும் சிறு பரிவு, இரவு நேரப் பணி, கண்டுகொள்ளவும் கண் காணிக்கவும் யாரும் இல்லாதது போன்றவை. கண்காணிப்பு இல்லாததால் அலுவலகத்திலேயே சிலர் தவறான உறவு கொள்கின்றனர்.



ஐ.டி. துறையில் தனிமனித வாழ்க்கைக்கு மரியாதையே இல்லை. அலுவலக வேலை காரணமாகப் போகத் தவறிய நண்பர்களின் திருமணங்கள், குடும்ப துக்கங்கள், இழந்த சந்தோஷங்கள் என்று எந்த ஒரு ஐ.டி-யாளனிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். தொழிலாளிகளுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறை அவ்வளவு நாட்கள் விடுமுறை என்று கம்பெனிகள் சொன்னாலும், அதை சுலபமாக எடுக்க விட மாட்டார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என் நண்பன் பெற்றோரை சந்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தெலுங்குப் புத்தாண்டுக்கு ஊருக்குப் போகவேண்டும், பெற்றோர்களோடு கழிக்கவேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்று வருகிறான். முடியவில்லை. காரணம் வேலைப்பளு. இதெல்லாம் சிறு சிறு உதாரணங்களே. தனி மனித வாழ்க்கை சிதைவதால் பணியில் கவனப்பிசகு ஏற்படு வதுடன் மன அழுத்தமும் ஏற்படுகிறது.



தகவல் தொழில்நுட்பத்தில் சமீப காலப் பிரச்னை பணி நிரந்தரமின்மை. ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விலக்கலாம். காரணம் தேவையில்லை. ஊழியனின் performance சரியில்லை என்பார்கள். வேலையை விட்டுத் தூக்கினால் கேட்க வலுவான சட்டங்களோ, நாதியோ இங்கு இல்லை. கோடி கோடியாக இந்த சமுதாயத்துக்கும் அரசுக்கும் எங்களால் வருவாய் இருந்தாலும், எங்களுக்கென்று பணி பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை. என் நண்பனின் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், கணினியில் அவனுடைய பயோடேட்டா இருந்த காரணத்தால் (வேறு வேலைக்கு விண்ணப்பிக்க முயல்கிறான் என்று) அவனை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டனர். சமீபத்தில் ஒரு கம்பெனியில் ஒரு வருடம் முதல் 10, -15 வருடங்களாக வேலை செய்தவர்களைக் கும்பல் கும்பலாக வேலையைவிட்டுத் தூக்கினார்கள். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் முன்னர் வேலை செய்ததாகக் கூறிய கம்பெனி பொய்யானது என்று அவர்கள் கண்டுபிடித்தது. ஏன், இவர்களை வேலைக்குச் சேர்க்கும்போது இதையெல்லாம் சரி பார்த்துத்தானே வேலைக்கு எடுத்தார்கள்? கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரியிறைக்கும் அரசு, எங்களையும் கண்டுகொள்ள வேண்டும்.


குடி, வார இறுதிக் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஐ.டி. துறையில் உள்ளவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. இந்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். பெரும்பாலான ஐ.டி-யாளர்கள் வேலை காரணமாக வெளி ஊர், வெளி மாநிலங்களில் வாழ்பவர்கள். 20, -22 வயது வாலிபனுக்கு மாதம் 15, -20 ஆயிரம் கையில் வரும்பொழுது என்ன செய்வது என்று தெரிவதில்லை. அவனுக்கு வழிகாட்ட சமூகமோ பெற்றோர்களோ சக ஊழியர்களோ முயல்வதில்லை. மாறாக, சமூகம் அவனை ஒரு நுகர்வாளனாக மாற்ற முற்படுகிறது. அலுவலகமோ அவனை அந்நிய நாட்டில் மணிக்கு இவ்வளவு என்று விலை பேசுவதுடன் தன் கடமையை முடித்துக்கொள்கிறது. பெற்றோர்கள், 'இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ சம்பாதிக்கிறான். அடுத்து வெளிநாடு வேற போகப்போறான்' என்கிற ஆனந்த களிப்பிலேயே அவனைக் கண்காணிக்கும் கடமையை மறந்துவிடுகிறார்கள். கை நிறையக் காசு, கட்டற்ற சுதந்திரம்... இது போதாதா இந்த வயதில் தடம் மாறிப்போக?



சமூகம் தன் போக்கை மாற்றிக் கொண்டு எங்களைப் போன்ற தொழி லாளர்கள் மீது நிஜமான அக்கறை செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
-- நன்றி விகடன்

20 May 2008

தேவதைகளின் தேவதை ebook

|0 comments

காதலைப் பற்றி
முழுவதும் தெரிந்து கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன்
தெரிந்து கொண்டதும்
இறந்து விடுவேன்!
என உருகுகிற தபூசங்கரைத் தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறாள் காதல் தேவதை! அதனால்தான் இவரது பேனாவில் எப்போதும் காதலே நிரம்பி காதலே வழிகிறது.


உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப் பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம்& ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவே இல்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள்.

காதலுக்கு வயதோ வானமோ ஒரு எல்லையில்லை. எனவே எல்லோரும் தேவதைகளின் தேவதை தருகிற காதல் ரசத்தைப் பருகலாம்... பருகி உருகலாம்!


Right Click and select "Save Target As" DOWNLOAD

காஃபியின் கதை

|0 comments

காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.

எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன.

அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதிகளை உட்கொண்டு உற்சாகமாக இருந்ததால், மோக்கா எனப்படுகிறது. அது தற்போது காஃபியுடன் தவிர்க்க இயலாத சொல்லாகி விட்டது. 'கஃபே கேன்ஸ்' எனப்படும் காஃபிக் கடைகள் முதன்முதலில் புனித நகரமான மெக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அரேபியா நாட்டின் சதுரங்கம் விளையாடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எப்போதுமே மகிழ்ச்சியில் களைக்கட்டி கொண்டிருக்கும் பிரபலமான இடங்களில் காஃபியின் இனிமை வேகமாக பரவியதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காஃபி விற்பனையாகும் கடைகள் புது வளர்ச்சியும், தனித்தன்மையையும் அடைந்தன.

அதன்பிறகு டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாடுகளின் காலனிகளின் மூலமும் மற்ற இடங்களுக்கும் காஃபியின் மகத்துவம் பரவ ஆரம்பித்தது. 1683 ஆம் ஆண்டு வெனிஸ் நகரின் பிரபல பியாசா சான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில்தான் முதன்முதலாக ஈரோப்பியன் காஃபி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அந்த இடம் காஃபிக்கு பெயர்பெற்ற இடமாகவே உள்ளது.

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு சந்தையான, லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனமே ஒரு காஃபி கடையாகவே முதலில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1688 ஆம் ஆண்டு எட்வர்ட் லாயிட்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யும் கப்பல்களின் பட்டியல்களை தயாரிப்பது இவரது பணியாகும். 1668 ஆம் ஆண்டில் தான் தென் அமெரிக்க மக்களால் காஃபி சுவைக்கப்பட்டது.

1773 ஆம் ஆண்டு போஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன் எனப்படும் காஃபி அவுஸில்தான் திட்டமிடப்பட்டது. இன்று நிதி மாவட்டம் என்றழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள காஃபி கடைகளில்தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும், பேங்க் ஆஃப் நியூயார்க்கும் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

1720 - ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தென் அமெரிக்காவில் காஃபி பயிரிடப்பட்ட நிகழ்ச்சி, காஃபி வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். 60 வேறுபட்ட நாடுகளில், பெரும்பாலும் வளரும் நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்பட்டாலும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் காஃபி அதிகளவில் அருந்தப்படுகிறது.

காஃபியை மிக அதிகமாக தயாரிக்கும் நாடு பிரேசில், காஃபிக்கு மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா. காஃபியின் தலைசிறந்த ஆறு தயாரிப்பாளர்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது

காஃபி பற்றி மேலும் சுவையான தகவலுக்கு http://www.indiacoffee.org/

நான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் !

|0 comments
கொடைக்கானலில் ஒருவரை பார்த்த 4 நிமிடத்தில் அவரைப் போன்றே வரைந்து சாதனை படைத்து வருகிறார் பாலு என்ற ஓவியர். கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த பாலுவுக்கு சிறு வயது முதலே ஓவியம் தீட்டுவதில் அளவு கடந்த ஆர்வம். ஒருவரை பார்த்த நான்கு நிமிடத்தில் அதே போன்று ஓவியம் வரைந்து விடுகிறார். இந்த சாதனை ஓவியர் இப்போது கொடைக்கானலில் முகாமிட்டு ஓவியங்களை வரைந்து தள்ளுகின்றார். குறிப்பாக தன்னை காண வரு்ம் சுற்றுலா பயணிகளின் முகத்தை அப்படியே வரைந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து விடுகிறார். இதனால் இவரை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பாலு கூறுகையில் நான் சிறு வயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். எனக்கு என குரு யாரும் இல்லை. எனது சொந்த முயற்சியின் காரணமாகவே ஓவியங்களை வரைந்து வருகிறேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே எனது லட்சியம் என்கிறார்.

19 May 2008

இதுவல்லவோ தாய்மை!

|0 comments
''உலகத்தில் நீதி செத்து விட்டது.. நல்லவர்கள் இல்லாமலே போய் விட்டார்கள்" என்று விரக்தி கொள்கிறவர்களிடம் இந்த அசாத்தியத் தாயைத்தான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.
இழக்கக் கூடாத வயதில் கணவனை இழந்து, வாழ்வதற்கே ஆதாரம் இன்றி, ஆதரவும் இன்றி தவித்தவர் இவர். வீடு வீடாகப் போய், பாத்திரம் தேய்த்து, சமையல் வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தியவர்.. இன்றும் நடத்தி வருபவர்.
அப்படிப்பட்ட ஒரு பெண்மணி, ஆதரவின்றி குப்பையில் வீசப்பட்ட ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்த்து, ஆளாக்கி, எந்தக் குறையும் வைக்காமல் திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார் என்றால், அது சாதாரண காரியமா?
''இதுக்கே மலைச்சுப் போனீங்கன்னா எப்பிடி? இன்னிக்கு, இத்தனை வயசுக்கு மேல, அதே குப்பைத் தொட்டியிலருந்து இன்னொரு பெண் குழந்தையையும் எடுத்து பழைய உற்சாகத்தோட வளர்த்துக்கிட்டிருக்காங்களே அவங்க..'' என்று அவரை நன்கு அறிந்தவர்கள் மேலும் ஆச்சர்யம் தர, சந்தித்தோம் அந்த தியாகத் தாயை!
''என்னையப் பத்தி எழுதப் போறீங்களா? அதெல்லாம் எதுக்கும்மா? என் பொண்ணுக்கும் சரி, அவ புகுந்த வீட்டுக்கும் சரி.. அவ என் பொண்ணு இல்லைங்கற விஷயமே தெரியாது! இப்போ அதை நான் வெளியில சொன்னா அவ வாழ்க்கை என்னாகுறது?'' என்று முகம் காட்டக்கூட மறுத்துவிட்ட அவரைப் பார்க்கப் பார்க்கப் பெருமை பொங்கியது நமக்கு.
ஆர்வம் பெருக்கெடுத்து மேலும் விசாரித்த நம்மிடம் விரிவாகவே பேசினார் அந்தப் பகுதியில் வெகு காலமாக வசிக்கும் ஜி.கே.முரளிதரன் என்பவர்..
''லட்சுமியம்மாவுக்கு மதுரை பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊர். அந்தக் காலத்துல பஞ்சம் தலைவிரிச்சு ஆடுனப்ப பிழைப்பு தேடித்தான் திருச்சிக்கு வந்திருக்காங்க. அவங்க வீட்டுக்காரர் ரிக்ஷா ஓட்டிக்கிட்டிருந்தார். மனுஷன் அன்பானவர்னாலும் குடிகாரர். அதனாலதான், அவரை மட்டுமே நம்பியில்லாம, லட்சுமியம்மா நாலு வீட்டுல பாத்திரம் தேய்ச்சு வீட்டை நடத்திக்கிட்டு இருந்துச்சு. அவங்க மனசுல இருந்த ஒரே குறை, தனக்கு ஒரு குழந்தை இல்லையேங்கறதுதான்.
அதுக்காக கோயில் கோயிலா அலைஞ்சு பார்த்த லட்சுமியம்மா, அதுக்கப்புறம்தான் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. தீராத குடிப்பழக்கத்தால அவங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தைக்கு தகப்பனாகுற தகுதியை இழந்துட்டார்ங்கற உண்மை அப்போதான் தெரிஞ்சிருக்கு. விதியை நொந்துக்கிட்டு சமாதானம் ஆகிட்டாங்க அந்தம்மா. ஆனா, அவங்க புருஷன் குடியே கதினு கெடந்ததுல, குடல் வெந்துபோய் ஒரு நாள் இறந்தே போயிட்டார்.
சொந்தம்னு யாரும் இல்லாத ஊருல புருஷனையும் இழந்துட்டு, தன்னந்தனி ஆளா நெருப்பு மாதிரி வாழ்ந்தாங்க அவங்க. அப்போதான் ஒருநாள் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி பக்கத்துல உள்ள குப்பைத் தொட்டியில ஒரு குழந்தை கிடக்குறதைப் பார்த்திருக்காங்க. அதைத் தூக்கினதுமே லட்சுமிக்குள்ள மறைஞ்சிருந்த தாய்மை உணர்வு விழிச்சுக்கிடுச்சு. ஆண்டவனே தனக்குக் கொடுத்த துணைனு நினைச்சு அதை உயிருக்கு உயிரா வளர்த்தாங்க.
இந்த ஏரியாவுலயே ஒரு சில பேரைத் தவிர வேற யாருக்கும் இந்த ரகசியம் தெரியாது. தன் சொந்தப் பொண்ணு மாதிரியே பாசம் காட்டி அந்தக் குழந்தையை கான்வென்ட்ல படிக்க வைச்சாங்க லட்சுமியம்மா. சொந்த ஊர்ல இருந்து எப்பயாவது வர்ற சொந்த பந்தங்கள்லாம் அந்தக் குழந்தையை அநாதைனு சொன்னதால அவங்க எல்லாரையுமே துச்சமா தூக்கியெறிஞ்சிட்டாங்க.
யார் தயவும் இல்லாம அந்தக் குழந்தையை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு எங்களுக்குத்தான் தெரியும். கூலி வேலை, வீட்டு வேலைனு தான் ராத்திரியும் பகலுமா உழைச்சாலும் அந்தப் பொண்ணை கஷ்டப்பட விடக் கூடாதுனு ரொம்ப வைராக்கியமா இருந்தாங்க லட்சுமியம்மா. தானே நல்ல மாப்-பிள்ளையா பார்த்து கல்யாணமும் பண்ணிக் கொடுத்தாங்க.
'அம்மா.. அம்மா..'னு அந்தப் பொண்ணு கதறி அழுதுக்கிட்டே புருஷன் வீட்டுக்குப் போனப்போ உண்மையெல்லாம் தெரிஞ்ச எங்களுக்கு சிலிர்ப்பா இருந்துச்சு. இப்போ அந்தப் பொண்ணு ரெண்டு குழந்தைகளோட புகுந்த வீட்டுல சந்தோஷமா வாழுது.
அதுக்கப்புறம் திரும்பவும் தனி மனுஷியா கூலி வேலைக்குப் போய் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்க லட்சுமியம்மா. அப்பதான், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திரும்பவும் அதே குப்பைத் தொட்டியில இன்னொரு பெண் குழந்தை அந்தம்மா கையில கிடைச்சுது. 'இதுவும் எனக்காக ஆண்டவன் அனுப்பி வச்ச துணைதான்'னு சொல்லி, அதையும் இப்போ சீராட்டி வளர்த்துக்கிட்டிருக்காங்க அவங்க.
'நீ எதுக்கும்மா இப்படி பாரத்துக்கு மேல பாரம் சுமக்கறே?'னு நாங்கள்லாம் கேட்டோம். 'பாரம்னு நினைச்சா உடம்பு கூட பாரம்தான். கடமைனு நினைச்சா கஷ்டம் தெரியாது'னு சொல்லி எங்க வாயை அடைச்சுட்டாங்க.
'இந்தப் பொண்ணையும் சொந்தப் பொண்ணுனு சொல்லி வளர்க்கத்தான் அவங்களுக்கு ஆசை. ஆனா, வயசாகிட்டதால அது முடியலை. அநாதைக் குழந்தைனு சொல்லித்தான் வளர்க்கறேன்'னு கவலைப்படுற அவங்க, இந்தப் பொண்ணையும் கான்வென்ட்லதான் படிக்க வைக்கிறாங்க.
இப்படி ஒரு அம்மாவைப் பார்க்குறதே புண்ணியம்னு நாங்கள்லாம் நினைச்சுக்-கிட்டு இருக்க, அவங்க முதல் பொண்ணுக்குத்தான் அவங்க மேல ரொம்ப வருத்தமாம். 'நீ ஏம்மா யாரோ அநாதைக் குழந்தையை எல்லாம் எடுத்து வளக்குறே?'னு சண்டை போடுதாம். இது எப்படி இருக்கு பார்த்தீங்களா!'' என்று அவர் முடிக்க, நம் இமையும் இதயமும் கனத்திருந்தது.

குறிப்பு: இந்தத் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பெயரும் சில தகவல்களும் மாற்றப்பட்டுள்ளன. சில அடையாளங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
--
நன்றி விகடன்

சிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்!

|0 comments
திங்களன்று சீனாவை உலுக்கிய பயங்கர பூகம்பத்தின் போது இடிபாடுகளில் சிக்கி சுமார் 4 நாட்களுக்கும் மேலாக இருந்த 46 வயது நபர் காகிதங்களையும் சிகரெட்களையும் தின்று உயிர் பிழைத்துள்ளார். பெங் ஸீஜுங் என்ற அந்த நபர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பெய்ச்சுவான் என்ற இடத்தில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினார்.வலது கையை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. உடலின் மற்ற உறுப்புகள் இடிபாடுகளின் அழுத்தத்தால் அசைக்க முடியாமல் போனது.வெள்ளிக்கிழமை மாலை இடிபாடுக‌ளிலிருந்து மீட்கப்பட்ட இவர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். "இடிபாடுகளு‌க்கு‌ள் அகப்பட்டு‌க் கொ‌ண்டது‌ம் அடிபட்ட இடது கைக்கு முதலில் கட்டுப் போட்டேன், பிறகு உணவைப் பற்றி யோசித்தேன், என்ன செய்வதென்று தெரியவில்லை. பாக்கெட்டில் வெறும் சிகரெட்டுகளே இருந்தன. அதனை துண்டுதுண்டாக வெட்டி சாப்பிட்டேன், பிறகு காகிதங்களை சாப்பிட்டேன், மேலும் உடலின் நீர் அளவை தக்கவைக்க காலில் உள்ள ஷூவை கழட்டி அதில் என் சிறு நீரைப் பிடித்து அதனைக் குடித்தேன்" என்று தான் உயிர்பிழைத்த பயங்கர அனுபவத்தைப் பற்றி கூறினார்.இவருக்கு அருகில் இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருந்ததாகவும் அவர்களுக்கும் தான் இந்த யோசனையைக் கூறியதாகவும் ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை எனவும் இதனால் ஒவ்வொருவராக தன் கண் முன்னால் மரணமடைவதை காண நேரிட்டது என்று‌ம் கூ‌றினார்.பெங்குடன் மேலும் 2 ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் மீட்கப்பட்டனர். இவர்கள் பெங்கின் வழியை கடைபிடித்து உயிர்பிழைத்ததாக கூறியுள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு...

|1 comments
ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது.

ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அவரது கோபம், ஆளுமைத் தன்மையைக் கூட நாம் அப்போது ரசித்திருப்போம். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் தீய குணங்களை மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் பல காதல் திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. காதலர்கள் நன்கு பக்குவப்பட்டு, தங்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் திருமணம் முடிந்ததும் மனம் மாறி தங்களது பிள்ளைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதுவரை இல்லாத பிரச்சினைகள் அப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாதல்லவா. ஆம், தங்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மகனோ, மகளோ தள்ளப்படுகிறார்கள். அதனால் தம்பதிகளுக்குள்ளேக் கூட பல மனக்கசப்புகள் உருவாகின்றன.

எனவே எந்த நேரத்திலும் தான் கைப்பிடித்தவரை எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனவலிமையை காதலர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அப்படியே தம்பதிகளுக்குள் எந்த பிரச்சினை எழுந்தாலும் அவர்கள் அதை தனது பெற்றோர்களிடம் சொல்லிக்கூட குறைபட்டுக் கொள்ள இயலாது. ஏனெனில் 'நீ தானேத் தேடிக் கொண்டதுதானே' என்று அவர்கள் நம்மைத்தான் கைகாட்டுவர்.

காதலிக்கும்போதே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காதலித்துவிட்டோம், கண்டிப்பாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் காதலர்களாகவே பிரிந்து விடுவதும் நல்ல முடிவுதான், ஏனெனில் திருமணத்திற்குப் பின் மன வருத்தம் வந்து நீதிமன்றத்தின் வாயிலில் கணவன் - மனைவியாக பிரியும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதில்லை.

அதனால் காதலிக்கும்போது நல்ல காதலர்களாக இருப்பவர்கள் ஊரே மெச்சும் தம்பதிகளாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி, சிந்தித்து முடிவெடுங்கள். இல்லையேல் பாழாவது வேறு எதுவுமல்ல... உங்கள் வாழ்க்கை.
இதுபற்றி ஒரு நகைச்சுவையும் உண்டு,

அதாவது, திருமணத்திற்குப் பின் காதலன் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள் காதலி.

இப்போது போல் எப்போதும் தனது காதலி இருப்பாள் என்று நம்பினான் காதலன்.

இது இரண்டுமே நடக்கவில்லை என்பதுதான் உ‌ண்மை.

அஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்

|0 comments
முதல் முறையாக தமிழ் படம் ஒன்று உலக அளவிலான சந்தைக்கு போகிறது. அந்த பெருமையைக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அனிமேஷனில் நடிக்கும் சுல்தான் தி வேரியர். ரஜினி நடித்து வெளியான படங்கள் தமிழகத்திலும் உள்நாட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது சாதாரண விஷயம். ஆனால் ஜப்பானில் 400 நாட்கள் வரை ஓடி சக்கைப் போடு போட்டது முத்து. அதைத் தொடர்ந்து உலகளவில் ரஜினியின் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டது.

சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் உலகளவில் ரெகார்ட் பிரேக் செய்தது. இது தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தையும் தலைநிமிர வைத்தது. தற்போது தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக தயாராகி கொண்டிருக்கும் குசேலன் படத்தின் உள்நாட்டு உரிமையை சாய்மீரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை ரூ.40 கோடி கொடுத்து ஐங்கரன் வாங்கியுள்ளது.
உலக மார்க்கெட்டில் எகிறும் ரஜினியின் படங்களின் அடுத்த வரிசையில் இருப்பது சுல்தான் தி வேரியர். அனிமேஷனில் ரஜினி கலக்கும் இந்த படம் ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ், அனில் அம்பானியின் அட்லாப்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகியவையின் கூட்டு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மிக அதிகமாக 70 கோடி பட்ஜெட்டில் இந்த அனிமேட்டட் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ரூ.250 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
70 லட்சத்தில் உருவாக இருந்த இந்த படம், சிவாஜியின் சூப்பர் டூப்பர் ஹிட்டினால் 70 கோடி பட்ஜெட்டுக்கு உயர்ந்துள்ளது. ரஜினியின் எல்லா வயது ரசிகர்களும் ஆதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படமாக உள்ளது சுல்தான் தி வேரியர்.
சுல்தானை தொடர்ந்து வார்னர் பிரதர்சுடன் இணைந்து ஆக்கர் ஸ்டூடியோஸ், பில்லாவின் அடுத்த பார்ட்டை தயாரிக்க உள்ளது. அதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கிறார்.

போலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி

|0 comments
போலி சாஃப்ட்வேரால் பிரபல நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் சாஃப்ட்வேர் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதற்கு இணையாக அடோப் சிஸ்டம் இன்கார்பரேட் உள்ளிட்ட சில நிறுவனங்களும் உள்ளன.
இந்நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில், புதிது புதிதாக சாஃப்ட்வேரை உருவாக்குகின்றன. இந்நிறுவனங்கள் தயாரித்த சாஃப்ட்வேர் சந்தைக்கு விற்பனைக்கு வந்தவுடன் அவற்றை அப்படியே பதிவு செய்து போலி சாஃப்ட்வேர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
போலி சாஃப்ட்வேரை உருவாக்குவதையே சில நிறுவனங்கள் முழு நேர பணியாகக் கொண்டுள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எத்தகைய சாஃப்ட்வேரை தற்போது உருவாக்கி வருகிறது, அது எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்ற விவரங்கள் அந்நிறுவன அதிபர் பில் கேட்ஸýக்கு அடுத்தபடியாக இந்த போலி சாஃப்ட்வேர் உருவாக்குவோருக்குத்தான் தெரிகிறது.
போலி சாஃப்ட்வேர் உருவாக்கம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
போலி சாஃப்ட்வேர் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், அவற்றையே பொதுமக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே போலிகளின் விற்பனைக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.
முன்னர் 3 சதவீதமாக இருந்த போலி சாஃப்ட்வேர் விற்பனை தற்போது 38 சதவீதமாக உயர்ந்திருப்பதே இதற்குச் சான்று.
இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா போன்ற நாடுகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 26 சதவீதமாக உள்ளது.
நிறுவனங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேரின் விற்பனைக்கு இந்த போலி சாஃப்ட்வேர் கடும் சவாலாக விளங்குகின்றன. மேலும் முதல் முதலில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கூட இதுபோன்ற போலி சாஃப்ட்வேரை உபயோகப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது நிறுவன அதிபர்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 68 சதவீதத்துக்கும் அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் 65 சதவீதமாக உள்ளது. ஆசியாவில் இது 59 சதவீதமாகும்.
ஆர்மீனியா, அஜர்பெய்ஜான், வங்கதேசம் போன்ற நாடுகளில் போலி சாஃப்ட்வேர் விற்பனை 90 சதவீதமாகும்.

டாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்

|0 comments

மது பிரியர்களுக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புதிய ரக பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களில் மொத்தம் 103 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8000 கோடி வருவாய் கிடைக்கிறது.
உள்நாட்டு தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது கோடை வெயில் கொளுத்துவதால் மதுபிரியர்களை குளிர்விக்க புதிய ரக பீர் வகைகளை டாஸ்மாக் அறிமுகம் செய்துள்ளது.
புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 4 புதிய பீர் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 2 வகை பீர்கள் மாவட்டம் தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
6 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.60க்கு ‘ஓரியன் 2000 ஸ்டாரங்‘, 5 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.62க்கு ‘ராயல் சேலஞ்ச் லெகர்‘ பீரும் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 5000 பீர் ரூ.67க்கும், கிங்பிஷர் ரூ.66க்கும், கோல்டன் ஈகிள் லெகர் ரூ.57க்கும், மார்க்கோபோலோ ரூ.60க்கும் விற்கப்படுகிறது. பெரும்பாலும் 5000 மற்றும் கிங்பிஷர் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது.
இப்போது விலை குறைவாக புதிய வகை பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மதுரை உட்பட சில மாவட்டங்களில் இந்த பீர்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. மற்ற மாவட்டங்களில் ஸ்டாக் தீர்ந்த பின்னர் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த புதிய வகை பீர்களை புதுச்சேரியை சேர்ந்த ஸ்கால் பிரீவேரீயஸ் லிமிடெட்டின் சிகா நிறுவனம் தயாரிக்கிறது.

போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்

|0 comments
போனில் "139" டயல் செய்தால் ரயில்வே தகவல் சேவை கிடைக்கும். அதுபோல விரைவில் தரப்படவுள்ள எண்ணை டயல் செய்தால், வீடு தேடி ரயில் டிக்கெட் வந்து சேரும்.
இந்த திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்கிறது ரயில்வே. அதற்காக இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி.) தீவிர கவனம் செலுத்தி வருகிறது. "டயல் எ டிக்கெட்" என்ற பெயரில் இந்த சேவை அறிமுகமாகும். இப்போது அது ரயில்வே நிர்வாகத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது.
போன் செய்து டிக்கெட்டை வீடு தேடிப் பெறும் வசதியில் ஏற்படக்கூடிய தடங்கல்கள், தவறுகள் பற்றியும், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது பற்றியும் ஆராயப்படுவதாக டெல்லியில் ஐ.ஆர்.சி.டி.சி. உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் "டயல் எ டிக்கெட்" வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது முதல்கட்டமாக டயல் செய்து, டிக்கெட்டை வீட்டில் பெறும்போது பணம் செலுத்த வேண்டும்.
பிறகு, அது கிரெடிட் கார்டுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த வசதிக்காக ரயில்வேயின் விசாரணை போன் எண் "139" போல அதற்கு பக்கத்து எண் ஒன்றை ஒதுக்குமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பித்துள்ளோம் என்றார் அவர்.
இப்போது "139"க்கு டயல் செய்து ரயில் வருகை, புறப்பாடு, பயண நேரம், டிக்கெட்டின் நிலை, கட்டணம், இருக்கை வசதி ஆகிய விசாரணைகள் செய்யலாம்.
டயல் எ டிக்கெட் எண் முற்றிலும் போன் மூலம் டிக்கெட் புக் செய்வதற்கு மட்டுமே ஒதுக்கப்படும். ரயில்வே கூடுதல் சேவையில் இது வரவேற்பை பெறும் என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்

|0 comments
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்த விழாவில் வரும் 18ம் தேதி அஜித்தின் 'பில்லா' திரையிடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அஜித்தும் விழாவில் கலந்துகொள்கிறார். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் பட வியாபாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக கேன்ஸ் பயணமாகிறார். இதுதவிர, மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ் பிரிவு கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது டிவிடிக்களை கடை விரிக்கிறது. இதனால், தற்போதைய கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் கலைஞர்கள் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம்.

18 May 2008

கோமாதா நம் குலமாதா!

|0 comments
  • பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
  • கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.
  • நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.
  • கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.
  • வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

--
நன்றி விகடன்.

கடவுளின் வேஷம்!

|0 comments
ஒரு கோயில் மண்டபம். அங்கு, கடவுளைப் பற்றி பேசிக் கொண் டிருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதை, மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள். 'இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!' என்று நினைக்கும் போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
'சரி... நேரில் போய் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம்' என்று அங்கிருந்து புறப்பட்டார்.
சாமியார் பேசிக் கொண்டிருந்த கோயில் மண்டபத் தின் அருகே வந்து சேர்ந்தார். ஆலயத் தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.
அப்போது, வெளியே வந்த பக்தர் ஒருவர், ''வேஷப் பொருத்தம் பிரமா தமா இருக்கு!'' என்றார் கடவுளைப் பார்த்து.
கடவுளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ''ஐயா, நான்தான் உண்மையான கடவுள்!'' என்றார்.
உடனே, ''என்கிட்டே சொன்னதோட வெச்சிக்க. வேற யார்கிட்டேயும் சொல்லிடாத. பிறகு, உன்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில கொண்டு போய் விட்டுடுவாங்க!'' என்றார் பக்தர்.
''நான் சொல்றதைக் கொஞ்சம்...'' - கடவுள் ஏதோ சொல்லத் துவங்குவதற்குள், அவரை இடை மறித்த பக்தர், ''ஒண்ணும் சொல்ல வேணாம். முதல்ல இடத்தைக் காலி பண்ணு. கூட்டம் முடிஞ்சி, சாமியார் வெளியே வர்ற நேரம் இது... அதுக்குள்ளே போயிடு!'' என்று கூறிச் சென்றார்.
வெளியே வந்த பக்தர்கள் எல்லாம் இவரைப் பார்த்துவிட்டு, சந்தேகத்தோடு விலகிப் போக ஆரம்பித்தார்கள்.
சாமியார் வந்தார். பார்த்தார். ''ஏம்பா... இப்படி இங்கே வந்து கலாட்டா பண்றே? பேசாம போயிடு!'' ''என்னைப் பற்றி பிரசங்கம் பண்ற உனக்குமா என்னை அடையாளம் தெரியலே?'' எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. கடைசியாக, கடவுளை ஓர் அறையில் தள் ளிப் பூட்டி விட்டுப் போய் விட்டார்கள்.
வேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
நள்ளிரவு நேரம். கதவைத் திறந்து கொண்டு மெள்ள உள்ளே வந்தார் சாமியார். ''கடவுளே! என்னை மன்னிச்சிக்குங்க... நீங்கதான் கடவுள்னு எனக்கு அப்பவே தெரியும்!''
''அப்புறம் என்ன... அந்த ஜனங்கள்கிட்டே சொல்ல வேண்டியதுதானே!''
''சொல்லி இருந்தா, என்னையும் பைத்தியம்னு சொல்லி உள்ளே தள்ளி இருப்பாங்க!''
கடவுள் சிந்திக்க ஆரம்பித்தார்.
'இந்த மனிதர்களுக்கு, இருக்கிற கடவுளைக் காட்டிலும் இல்லாத கடவுள் மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது!' என்று மனதுக்குள் எண்ணி யவர் அங்கிருந்து மறைந்து போனார்.
-- நன்றி, விகடன்.

20 கெட்டப்புகளில் ரஜினி

|0 comments
குசேலன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருபது விதவிதமான கெட்டப்புகளில், அதுவும் ஒரே பாடலில் தோன்றி அசத்தப் போகிறாராம்.
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற கத பறயும்போல் இப்போது ரஜினி நடிக்க குசேலன் எனும் பெயரில் தமிழிலும், குசேலடு எனும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தை தமிழில் கவிதாலயா-செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கில் அஸ்வினி தத்தின் வைஜயந்தி மூவீஸும் செவன் ஆர்ட்ஸும் தயாரிக்கின்றன.இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் ஜூலை 18 அல்லது 25-ம் தேதி படத்தை வெளியிடும் முடிவிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில் படம் குறித்து இதுவரை வெளிவராத விசேஷ தகவல்களை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
இதுவரை வந்த ரஜினி படப் பாடல்களில் இல்லாத அளவுக்கு ரஜினியைப் புகழ்ந்தும் அவரது பெருமைகளைச் சொல்லும் விதத்திலும் குசேலன் படத்தில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ரஜினியின் அறிமுகப் பாடலும், தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம், சித்ரா பாடும் இரண்டாவது பாடலும் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதங்களாகிவிடும். அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து இசையமைத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.
வாலியின் வசீகர வரிகளில் முதல் பாடல் இப்படித் தொடங்குகிறது:

சினிமா சினிமா சினிமாதான்
எம்ஜிஆரு
சிவாஜி சாரு
என்டிஆரு
ராஜ்குமாரு இருந்ததிந்த சினிமாதான்…
இப்பாடலுக்கு ஆகாயத்திலிருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரைகளில் அமர்ந்து ரஜினி வருவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டதாம். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பாடலை ரஜினிக்காகப் பாடியிருப்பவர் சங்கர் மகாதேவன். ரஜினியின் ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 கெட்டப்புகள்:
பாட்ஷா படத்தில் “அழகு… அழகு…” பாடலுக்கு கண்டக்டர், டிராபிக் கான்ஸ்டபிள், நாதஸ்வரக் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட், அல்ட்ரா மாடர்ன் இளைஞர், ரவுடி, சர்வர் என பல கெட்டப்புகளில் தோன்றி அசத்தியிருப்பார் ரஜினி.
இப்போது குசேலன் படத்தில் ஒரே பாடலில் 20 வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறாராம். இந்தியாவிலேயே காஸ்ட்லி பாடகர் எனப்படும் தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம் மற்றும் சித்ரா பாடும் இந்தப் பாடல் இப்படித் தொடங்குகிறது:
ஓம் ஸாரிரே ஸாரே ஸாரே…
போக்கிரி ராஜா

பொல்லாதவன் நீதான்…
இந்தப் பாடலை எழுதியிருப்பவரும் வாலிதான். ரஜினியின் புகழ்பெற்ற படங்களின் பெயர்களை மட்டுமே இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறாராம் வாலி. இந்தப் பாடலுக்காக 20 கெட்டப்புகளில் மின்னல் மாதிரி தோன்றி ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.
இவற்றைத் தவிர, ரஜினியுடன் அனைத்துக் கலைஞர்களும் இணைந்து பாடுவது போன்ற ஒரு பாடலும் உள்ளதாம். இதனை கைலேஷ்கர், பிரசன்னராவ் பாடியுள்ளனர்.
பசுபதி-மீனா ஜோடிக்கும் ஒரு பாடல் உண்டாம். கடைசி பாடல் நயன்தாராவின் சோலோ பாடல். ரஜினியை நினைத்து அவர் பாடுவது போன்ற இப்பாடலை சாதனா சர்க்கம் பாடியுள்ளாராம்.
தெலுங்குப் பதிப்புக்கும் இதே பாடல்கள் மற்றும் பாடகர்கள்தானாம். இப்போதைக்கு படப்பிடிப்புக்குத் தேவையான வடிவில் பாடல்களைத் தந்துள்ள பிரகாஷ், விரைவிலேயே தனது சவுண்ட் எஞ்ஜினியர் ஸ்ரீதருடன் லண்டனுக்குப் பறக்கிறார். அங்குள்ள மெட்ரோபோலிஸ் ஸ்டுடியோவில் சவுண்ட் மிக்ஸிங் செய்து உலகத் தரத்தில் பாடல்களைத் தரப்போகிறாராம் பிரகாஷ்குமார்.

குறுஞ்செய்திகள்

|0 comments
  • நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.- விவேகானந்தர்.
  • வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
  • ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
  • வெற்றி என்பது என்ன?உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி
  • மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.- சாணக்கியனின் பொன்மொழி
  • வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த
  • வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
  • உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல;பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது. -பாரதியார்

இதிலும் விஷம்

|0 comments
குளிர் பானங்களில் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன’ என்ற பிரச்னை நாட்டையே உலுக்கி எடுத்தது. இது ஏதோ மேல்தட்டு மக்களின் பிரச்னை என்று நடுத்தர வர்க்கத்தினரும் சாமானியர்களும் இருந்துவிட்டார்கள்.
ஆனால் இன்று, எல்லா தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் ஜீவாதாரமாய், உயிர் மூச்சாய் விளங்கும் பாலில் பெரிய அளவில் கலப்படம் நடந்து வருவதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசுவின் பாலைப் பருகிதான் லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் என்று நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலை அருந்தி வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிர் நாடியான பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் நாடு முழுவதும் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை பாலில் தண்ணீரைக் கலந்து காசு பார்த்த கும்பல், இப்போது ஒரு வித பவுடரைக் கலந்து அதிகளவு காசு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு வித மாவுப் பொருள்தான் அந்தக் கலப்படப பொருள். யாரும் எளிதில் கண்டு பிடித்துவிட முடியாத அளவிற்கு படு சீக்ரெட்டாக அந்த பவுடரை விற்கிறார்கள். கிலோ 800 ரூபாய்.
(அந்த பவுடர் பெயரையோ, அதை எதில் தயாரிக்கிறார்கள் என்ற ரகசியத்தையோ அது எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்பதையோ சொல்ல மறுக்கிறார்கள்.)
இப்படி வாங்கிய பவுடரை எப்படி பாலாக மாற்றி பால் கலப்படம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, பால் பண்ணை வைத்திருக்கும் ஒரு நபரோடு தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் நாம் விசிட் அடித்தோம்.
‘‘ஒரு டீஸ்பூன் அளவு பவுடருடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதை மிக்ஸ்சியில் போட்டு பத்து நிமிடம் அரைக்கிறார்கள். அப்போது அது தயிர் போன்ற நுரை கலந்த வெள்ளை கலரில் வருகிறது. அதை அப்படியே 25 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் 200 கிராம் சீனியை போட்டு நன்கு ஆற்றுகிறார்கள். தண்ணீரோடு கலந்து பிசுபிசுப்புத் தன்மையோடு பாலாக மாறியது பவுடர் மிக்ஸிங். அந்த 25 லிட்டர் கலவைப் பாலில் 25 லிட்டர் ஒரிஜினல் கறவைப் பாலை கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். தற்போது கலவை பாதி, கறவை பாதி என 50 லிட்டர் பால் சில்லறை விற்பனைக்கும், பண்ணைக்கும் கேன்களில் நிரப்பப்பட்டது. இந்தக் கலப்படப் பால்தான் ஊர் ஊராக சைக்கிளில் வைத்து விற்பவர்களுக்கும், டீக்கடைகளுக்கும், பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் கூட விற்பனை செய்யப்படுகிறது.
கலவைப் பாலையும், ஒரிஜினல் பாலையும் தனித்தனியே வைத்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என பால்மானியை வைத்துப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கூடவே எஸ்.எம்.எஃப் (கொழுப்புச் சத்து, இதர சத்து) அளவு எவ்வளவு என பார்த்ததில் ஒரிஜினல் பாலை விட கலவைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக காட்டியது.’’
தனியார் மற்றும் ஆவின் போன்ற குளிரூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யும் பால் கம்பெனிகளில் பாலின் தரத்தையும் விலையையும் நிர்ணயிப்பது இந்த அளவை வைத்துதான். அதனால் கலப்படப் பாலைக் கண்டுபிடிப்பது கடினம். இந்த கலப்படப் பாலில் புளியோ, வியர்வையோ பட்டால் கூட பால் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
இந்த கலப்படம் பற்றி ஓய்வு பெற்ற ஆவின் அலுவலர்களிடம் கேட்டோம். ‘‘பாலில் கலப்படம் நடப்பது உண்மைதான். ஆங்காங்கே மனசாட்சிக்கு விரோதமா பணத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற கலப்படப் பாலை விற்கிறார்கள். பெரும் பண்ணைகளில் கொழுப்புச் சத்து, இதரசத்து அளவுதான் பார்ப்பார்கள். பாலில் தண்ணீர் கலந்தால் கொழுப்புச் சத்து அளவு குறையும். அதனால் காசு கொள் முதல் அளவும் குறையும். ஆனால் கலப்படப் பாலில் கலக்கும் பவுடரில் என்ன கெமிக்கல் கலந்த மோசமான கொழுப்புச் சத்தைக் கலக்கிறார்களோ தெரியலை. கொழுப்புச் சத்து அளவு கூடுதலாக காட்டும். அதோடு இதரசத்துக்களை காட்ட அந்த அளவிற்கு சீனியை கலந்துவிடுகிறார்கள். இது பணத்திற்காக பாலில் விஷத்தைக் கலப்பது போன்றதுதான். தீவன பற்றாக்குறை மற்றும் மாடு வளர்ப்பு குறைந்த போதும் இன்றையத் தேவைக்கு ஏற்ற அளவு பால் கிடைக்கிறது என்றால் பெருகிவிட்ட இதுபோன்ற பால் கலப்படங்களால் தான்’’ என கொட்டித் தீர்த்தனர்.
அன்றாடம் பால், டீ, காபி என விற்பனைக்கும், உபயோகத்திற்கும், பயன்பட்டுத் தீர்ந்து விடுவதால் அது கலப்படக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது.
தாய்ப்பால் இல்லாததால் புட்டிப்பால் அருந்தும் குழந்தைக்கும், அன்றாடம் பால், டீ, காபி என குடித்து பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் இது போன்ற கலப்படப் பாலைக் குடித்தால் ‘ஸ்லோ பாய்ஸ்சனாக’ உடல் நலம் பாதிக்கும் என்ற அச்சத்தால் மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
பால் விலை உயர்ந்த போதும் தங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஜீவாதாரமான பாலை அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் மக்களை இது போன்ற கலப்படப் பால்களால் ஏமாற்றுவது நியாயமா? தண்ணீரில் பவுடரைக் கலந்து பாலை நஞ்சாக்கி பணம் சம்பாதிக்கும் கொடூர மனம் கொண்டவர்களுக்கு என்னதான் தண்டனை?

சூடு ஏறுது...

|0 comments

உஸ்.....அப்பாடா என்ன வெயில்...? வெளியில தலைகாட்ட முடியல.....என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. கத்திரி வெயில் என்பதால் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் சரியாகிவிடும். ஆனால் உலகம் முழுவதும் ஒரு விஷயம் தற்போது அனலடித்துக் கொண்டிருக்கிறது. அது, உலக வெப்பமாதல் எனும் குளோபல் வார்மிங்.
காலம் கெட்டுப் போச்சுங்க. பருவம் மாறி மழை கொட்டுது...திடீர் திடீரென்று புயல் காற்று ஊரை சுருட்டுது.... அங்கங்கே பூமி குலுங்குது. காரணமே தெரியாம கடல் பொங்குகிறது...எல்லாம் கலி காலம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் சீனாவை உலுக்கியுள்ள பூகம்பம், மியான்மரை புரட்டிப் போட்ட நர்கீஸ் புயல், கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த திடீர் மழை.... இதெல்லாம் காலம் மாறிப் போனதுக்கு உதாரணம். இதற்கு ஒருவகையில் நாம்தான் காரணம்.
உலகம் முழுவதும் பெருகிவிட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்சைடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டெட்ரா குளோரைடு, குளிர்சாதனங்களிலிருந்து வெளியாகும் பிரியான், குளோரோ புளோரின்...என காற்று மண்டலத்தில் கார்பன் மற்றும் அதன் கூட்டு வாயுக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனால் அமில மழை, காற்று மாசு, நோய் பரவல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சூரியனின் புற ஊதாக் கதிர்களின் நேரடி தாக்கத்தில் இருந்து நம்மைக் காக்க, புவி மட்டத்தில் இருந்து 36 கி.மீ உயரத்தில் இயற்கை அமைத்த கொடையான ஓசோன் படலத்தில் இப்போது சல்லடை போல் ஓட்டைகள்.
மேலும் காற்று மண்டலத்தில் கார்பன் வாயுத் தொகுதிகளின் அளவு 280 பி.பி.எம் (மில்லியனில் ஒரு பங்கு)தான் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு 380 பி.பி.எம்மைத் தாண்டி விட்டது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இது 800 ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் 500 பி.பி.எம்மைத் தாண்டினாலே நாம் உயிர் வாழ முடியாது என்பது மற்றுமொரு ஆபத்து.
ஏனெனில் காற்றில் கார்பன் வாயுத் தொகுதிகள் அதிகமாகிவிட்டால், அதில் இருக்கும் கார்பன் மூலக்கூறுகள் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி, அப்படியே திருப்பி தரும். இதனால் காற்று மண்டலம் வழக்கத்தை விட சூ...டாகிவிடும்.
இதைத் தடுக்க வேண்டும். தொடர்ந்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும். எனவே சுற்றுச் சூழல் மாசு படாமல் காக்க வேண்டும். காடுகளை வளர்க்கவும், காக்கவும் வேண்டும் என்று நிபுணர்கள் அலறினர். தனிமனிதர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா அமைப்புகள், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் ஓசோனில் ஓட்டைகள் விழுவது நின்றபாடில்லை. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருகின்றன. விளைவு, கடல் மட்டம் அதிகரித்து, நிலப்பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 5 மீட்டர் உயர்ந்து விடும். இதனால் 5 கோடி இந்தியர்கள் வீடுகளை இழப்பார்கள். இந்தியாவில் கடற்கரை ஓரம் உள்ள பல நகரங்கள் கடலுக்குள் சென்று விடும். குறிப்பாக சென்னை எண்ணூர் கூட கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
மறு புறம் உலக வெப்பமாதலால் கடல் நீர் ஆவியாகி செல்வதால், கடலில் வெற்றிடம் ஏற்பட்டு, அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உருவாகின்றன. மேலும் பருவம் தவறிய, குறைவான மழையளவு, முறையற்ற தட்ப வெப்பம், சுனாமி, பூகம்பம் என்ற தொடர் விளைவுகளும் ஏற்படும் என்கின்றனர் சூழலியல் நிபுணர்கள்.
இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை. இந்த பேராபத்தில் இருந்து மரங்கள் நம்மைக் காக்க முடியும். அவை நச்சு வாயுக்களை சுவாசித்து, நமக்காக பிராண வாயுவை வெளியிடுகின்றன. எனவே இருக்கும் காடுகளைக் அழிக்காமல், காக்க வேண்டும். காடுகள் இருந்தால் மண்வளம், மூலிகைகள், வன விலங்குகள், செழுமை, கூடுதல் மழையளவு, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன. பெல் போன்ற சில நிறுவனங்கள் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் தொழிற்சாலை வளாகத்தை சுற்றிலும் மரங்களை வளர்த்துள்ளன.
அது போல் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும். நம்மால் ஏற்பட்ட உலக வெப்பத்தை குறைக்க ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு, இப்போதே மரம் வளர்க்க தொடங்குங்கள். கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

17 May 2008

‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!

|0 comments
‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் ‌வீடு அ‌ல்லது ‌நில‌ம் அமையு‌ம். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்ம‌ண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.ரிஷபம், துலாம் ரா‌சி‌க்கார‌ர்க‌ள் கொஞ்சம் மணல் கட்டு உள்ள பகுதியை வாங்கலாம். மிதுனம், கன்னி - பழுப்பு நிற, பாறைகள் கலந்த மண் பகுதியில் சிறப்படைவர். பாறை ‌நில‌ம் எ‌ன்றா‌ல் பாறைக‌ள் பழமையான உதிர்ந்த நிலையில் காண‌ப்படு‌ம் ‌நில‌ங்களை வாங்கலாம்.தனுசு, மீனம் ரா‌சி‌யின‌ர் மணலும் மணல் சார்ந்த இடங்களையு‌ம், மகரம், கும்பம் களி மண் கலப்பு சார்ந்த இடங்களையு‌ம் வா‌ங்குவது ‌சிற‌ப்பு. க‌ட்டிய ‌வீ‌ட்டை வா‌ங்கு‌ம்போது எ‌ப்படி ‌நில அமை‌ப்பை பா‌ர்‌க்க இயலு‌ம். மேலு‌ம், முதல் தளம், இரண்டாம் தளம் என்றெல்லாம் இருக்கும்போது வீட்டின் ‌நில அமை‌ப்பு எ‌வ்வாறு நம‌க்கு‌ப் பொரு‌ந்து‌ம்?அத‌ற்காக‌த்தா‌‌ன், ‌வீ‌ட்டி‌ன் ‌சு‌ற்று‌ப்புற‌த்தை கண‌க்‌கிடு‌‌கிறோ‌ம். அதாவது, மேஷ ராசி‌க்கா‌ர்க‌ள் வா‌ங்கு‌ம் ‌வீ‌ட்டி‌ன் அருகே ‌மி‌ன்சார‌த் துறை அலுவலக‌ம், தீயணைப்பு அலுவலகம், அரசு அலுவலகம் இரு‌ப்பது நல்லது அ‌ல்ல‌து அ‌வ்வாறு அமையு‌ம்.ரிஷப ராசி எ‌ன்றாலே அது நந்தி. எனவே ‌ரிஷப ரா‌சி‌க்கார‌ர்க‌ள் பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்க‌ள் அரு‌கி‌ல் அமைய‌ப்பெ‌று‌ம் ‌வீ‌ட்டை வாங்கினால் சிறப்பாக அமையும்.சிம்ம ராசிக்கு அரசு அலுவலகங்களுக்கு பக்கத்தில், எம்.எல்.ஏ. வீட்டு பக்கத்தில், அமைச்சர் வீட்டு பக்கத்தில், பெரிய பதவி வகிப்பவர்களின் வீட்டின் அருகில் வீடு அமையும். ஏதாவது ஒரு அரசு அலுவலகம் அருகில் இருக்கும். அதாவது ரேஷன் கடைக்கு பக்கத்திலாவது வீடு அமையலாம்.கன்னி ராசிக்கு கல்வி நிறுவனங்களுக்கு பக்கத்தில், டீச்சர் டிரெயினிங் நிறுவனம் போன்ற பயிற்சி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் வீடு அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு கடை பக்கத்தில் வீடு அமையும். அதாவது வர்த்தக நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பர்.
விருச்சிக ராசிக்கு போலிஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் போன்றவை இருக்கும் இடத்தில் வீடு அமையும். இன்னும் சொல்லப்போனால் டிடக்டிவ் ஏஜென்சிக்கு பக்கத்தில், காவல்துறை அதிகாரி வீட்டின் பக்கத்திலாவது இவர்கள் குடியிருப்பார்கள். விருச்சிக ராசி பூமிக்காரகன் வீடு என்பதால் ஜமீன்தார் வீட்டு பக்கத்து வீட்டில் இவர்கள் குடி‌யிரு‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு.தனுசு ராசிக்காரர்களின் வீட்டின் ஒரு பக்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மறு பக்கத்தில் ரெளடியும் இருப்பார்கள். ஒரு பக்கம் பெரிய நல்ல தலைவரும், மறு பக்கம் கெட்டவர்களும் இருப்பர். டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் கூட தனுசு ராசிக்கு வீடு கிடைக்கும். மேலும், ராணுவத் தளபதி அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் வீட்டிற்கு அருகிலும் இவர்கள் குடியிருப்பார்கள்.மகரத்திற்கும், கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்குப் பக்கத்தில் வீடு அமையும், அதிலும் கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் ‌வீடு அமையும் வாய்ப்பு அதிகம்.மேலும், இந்த ராசிக்காரர்கள் எந்த மதமோ அந்த மதத்திற்கு எதிரான மதத்தினர் அதிகமாக குழுமியிருக்கும் இடத்தில் தான் இவர்களுக்கு வீடு அமையும்.கும்ப ராசிக்காரர்களுக்கு இரும்புக் கடை பக்கத்தில், தானியங்கள் அடுக்கி வைக்கும் இடம், கிடங்கு அருகில் வீடு அமையும். எப்போதும் லாரி வந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டும் இறக்கிக் கொண்டும், எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாக அது இருக்கும்.கும்பத்திற்கு வாசனைகள் நிறைந்த பகுதியில் வீடு அமையும். அதாவது மீன் மார்க்கெட், பூக்கடைக்கு அருகிலும் கிடைக்கும். மீன ராசிக்காரர்களின் பக்கத்து வீட்டில் ஆன்மீக ஞானிகளோ அல்லது வேதர்கள், பூசாரிகளோ இருப்பார்கள். மேலும், ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அவர்கள் வீடு அமையும்.ஆனால் இது அவரவர் தசாபுத்திகளின் அடிப்படையில் வித்தியாசப்படும்.மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நீச்சம் அடையும்போது, அவர்களுக்குரிய கிரகம் பலவீனமான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்குரிய இடத்தில் வீடு அமையாமல் எதிர்மறையான சூழ்நிலையில் வீடு அமையும்.எனவே இது பொதுவான அமைப்புதான். அவர்களின் கிரக தசாபுத்திகளுக்கு ஏற்ப மாறுபடும்.சுக்கிர தசை நடப்பவர்கள் நிழல் சாலையில் ரம்மியமான வீட்டில் வசிப்பார்கள். ராகு திசை நடப்பவர்கள் அதே நிழல் சாலையில் கரடுமுரடான இடத்தில் வசிப்பார்கள். தசாபுத்திக்கு ஏற்றவாரும் நிலை இருக்கும். கிரகங்கள் தங்களுடைய கதிர்வீச்சுகளை அவர்கள் மீது திணிக்கும். அ‌ந்த ‌கிரக‌த்‌தி‌ற்கு‌ரிய இட‌த்‌தி‌ற்கு ந‌‌ம்மை இழு‌த்து‌ச் செ‌ல்லு‌ம்.உதாரணமாக ஒருவருக்கு சனி தசை நடந்தது. அதுவும் சுபச் சனியல்ல, சிக்கலான சனி. சனி தசை என்பது சுடுகாட்டிற்கும் உகந்தது. அவருக்கு பெரிய பங்களா இருந்தது. சனி தசை நடக்கும் போது பங்களாவில் இருக்க வேண்டாம். மரணமே ஏற்படும் நிலை உள்ளது. நாற்றம் உள்ள வீடு அல்லது பிரச்சினை உள்ள வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினோம். அதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டிலேயே இருந்தார். திடீரென அந்த வீட்டிலேயே டிரைனேஜ் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. டிரைனேஜ் பிரச்சினை என்றாலே வீட்டிற்குள் நாற்றம் அடிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது சாவு நிகழ்ச்சிக்கு போய்விடுவார். அதுபோல் இருந்தது. தொடர்ந்து பல பிரச்சினைகளை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்தார்.ஏதாவது சுடுகாடு இருக்கிற மாதிரி வீட்டை‌ப் பார்த்து போய்விடுங்கள் என்று சொன்னேன். அதன்படியே செயல்பட்டார். அங்கு போனதும் நோய் விலகியது. 18 வருடமாக இருந்த வழக்கு சாதகமானது. எல்லாமே நல்லபடியாக நடந்தது.அதாவது சனி எளிமைக்குரிய கிரகம். கீழ் நிலையில் இருந்துகொண்டு ஒரு உயர்நிலையைத் தரக்கூடிய கிரகம். பிணம் எடுப்பவர்கள், அடக்கம் செய்பவர்களை யாரும் கீழ்மையாக சொல்ல மாட்டார்கள். எனவே சனி தசையில் நம்மை அப்பகுதியில் சென்று குடியேறி அவர்களைச் சென்று பார்த்து அதை உணர வைக்கவே சனி தசையில் அதுபோன்ற இடங்களில் குடிபெயர வைக்கிறது.சனி திசைதான் ஞானத்தை அளிக்கும். சனியை நீதிமான் என்றும் சொல்லலாம். ஆகாயத்தில் இருப்பவனை பூமிக்கு கொண்டு வரும். வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர வைக்கும். சனி தசை என்பது சனீஸ்வரன் ஆயுள் காரகன். சனியும் எமனுடைய பார்வை கொண்டவர். எனவே சனி திசை வாழ்க்கையை உணர்த்தும் காலகட்டமாகும்.

யோகா

|0 comments
1. யோகா பயணத்தை துவங்கும் முன், பயிற்சி செய்ய விரும்புவோர் இது பற்றி நன்கு தெரிந்த நிபுணர்களிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது.

2. மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவும். உங்கள் மருத்துவரின் அனுமதியுடனேயே யோகப் பயிற்சியை துவங்குங்கள். குறிப்பிட்ட சில நோய்கள் உள்ளவர்கள் இந்த யோகாசனங்களில் சிலவற்றை செய்யக் கூடாது என்பதால் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. எனவே மருத்துவப் பரிசோதனை மெற்கொண்ட பிறகு உங்கள் யோகா பயணத்தை துவங்குவது சிறந்தது.

3. கடும் நோய்களுக்கு ஆட்பட்டவர்கள், யோகா பயிற்சி முறைகளை கடைபிடிக்கும் முன் நோயை குணப்படுத்திக் கொண்டு தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. இதய நோயாளிகள் மருத்துவரையும் தங்களது யோகா குருவையும் கலந்தாலிசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் சில ஆசனங்களை இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

5. தலை கீழ் யோகாசன நிலை சைனஸ் உள்ளிட்ட மூச்சு தொடர்பான குறைகள் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல.

6. இரத்த அழுத்தம் உள்ளதா? முதலில் இரத்தக் அழுத்த அளவை சகஜ நிலைக்கு கொண்டு வருவது அவசியம்.

7. இந்த நோய் உள்ள நோயாளிகள் உடலை தலையால் தாங்கவேண்டிய ஆசனங்களை செய்யக் கூடாது. இது போன்ற தலைகீழ் ஆசன நிலை ரத்தத்தை வேகமாக மூளைக்கு செலுத்துவதாகும். இது போன்ற உடல் நிலை உள்ளவர்கள் 'சவாசனா' செய்யத் தடையில்லை. வேறு சில ஆசனங்களும் இவர்களுக்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் யோகா குருவிடம் இது பற்றி கலந்தாலோசித்து செய்வதே நல்லது.

8. யோகாசனங்கள் மூலமே வியாதிகளுக்கு சிகிச்சை பெறும் வழியும் உள்ளது.

9. குறிப்பாக பலவீனமான உடல் நிலை உள்ளவர்கள் முதலில் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். இரண்டாவதாக கடினமான ஆசனங்களை செய்யாமல், எளிய ஆசனங்களை முதல் 5 மாதங்களுக்கு பயிற்சி செய்யலாம். கடினமான யோக நிலைகளுக்கு உடல் உறுதி பெற்றப் பின் செய்யலாம். அதாவது ஆசனங்களுக்காக புற உடல் உறுப்புகளை வளைக்கும் போது உள்ளுறுப்புகள் பாதிக்காத வண்ணம்,வலி ஏற்படாமல் இருப்பதும் முக்கியம்.

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்!

|0 comments
நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் வரு‌ம் 16, 17 தே‌திக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் மூ‌ன்றாவது ப‌ன்னா‌ட்டு பா‌லிய‌ல் கரு‌த்தர‌ங்கை நட‌த்து‌கிறது. இது‌தொட‌ர்பான செ‌ய்‌தியாள‌ர் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது பே‌சிய இ‌த்துறை மரு‌த்துவ‌ர், தொட‌ர்‌ந்து புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய உறவு கொ‌ள்ளு‌ம் போது செய‌ல்படா‌த் த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட பா‌லிய‌ல் குறைபாடுக‌ள் அ‌திக அள‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இது‌தொட‌ர்பாக கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல், நா‌ள் ஒ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் உருவாகு‌ம் எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது ஏ‌ற்படு‌‌ம் ‌விறை‌ப்பு‌த்த‌ன்மை‌யி‌ல் ‌சி‌க்க‌ல் எழு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இத‌ற்கு காரண‌ம் புகை‌ப் ‌பிடி‌க்கு‌ம் போது நமது உட‌லு‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் ‌நி‌க்கோ‌ட்டி‌ன் உ‌றி‌‌ஞ்சு‌ம் ‌திசு‌க்களை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்குவதுட‌ன் அதனை சுரு‌ங்க‌ச் செ‌ய்‌கி‌ன்றன. இது ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்வ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையை பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌க்கு‌கி‌ன்றது எ‌ன்று ‌சி‌ங்க‌ப்பூரை‌சே‌ர்‌ந்த மரு‌த்துவ வ‌ல்லுந‌ர் அடை‌க்க‌‌‌ண் கூ‌றியு‌ள்ளா‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்பதை‌ப் போ‌ன்று மது அரு‌ந்துவது‌ம் பா‌லிய‌ல் ‌சி‌க்க‌ல்களை உருவா‌க்கவ‌ல்லது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். நா‌ட்டி‌ல் உ‌ள்ள 120 கோடி ம‌க்க‌ள் தொகையி‌ல் 20 கோடி ஆ‌ண்க‌ளு‌க்கு ஆ‌ண்மை‌க் குறைபாடு, போதாமை, பா‌லிய‌ல் செய‌ல்படாத த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட குறைபாடுகளா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருவதாக ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ன் மரு‌த்துவ‌ர் டி. காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். ப‌ல்வேறு உறவு ‌சி‌க்கலு‌க்கு‌ம், முர‌ண்பாடான நடவடி‌க்கை ஆ‌கிய ‌பிர‌‌ச்சனைகளு‌க்கு மூல காரணமே தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌திரு‌ப்‌திதா‌ன் எ‌ன்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இநத ‌சி‌க்க‌ல்க‌ள் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம், அய‌ல் அலுவலக சேவை குறைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளிடையே அ‌திக‌ம் காண‌ப்படுவதாகவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர். இத‌ற்கு காரண‌ம் மே‌ற்‌க‌த்‌திய கலா‌ச்சார‌த்‌தி‌ன் ‌மீதான மோக‌ம், வா‌ழ்‌க்கை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம், பரபர‌ப்பான, அழு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்ற வேலை சூழலு‌ம்தா‌ன் எ‌ன்று‌ம் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.உலகமயமாத‌ல், க‌ணி‌னிமயமாத‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விளைவு‌ம், பெரு‌கி வரு‌ம் இணைய‌த்தள கலா‌ச்சாரமு‌ம் ம‌க்க‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த வா‌ழ்‌க்கை முறையையே மா‌ற்‌றி அமை‌த்து உ‌ள்ளதோடு, ம‌க்களை அ‌திக அழு‌த்த‌த்தையு‌ம், பளுவையு‌ம் கொ‌ண்ட வா‌‌ழ்‌க்கை‌க்கு அழை‌த்து செ‌ல்வதோடு ம‌க்க‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கையையு‌ம் பா‌தி‌க்‌கி‌ன்றது. த‌ற்போதைய வேலை கலா‌ச்சார‌ம் பா‌லிய‌ல் தொட‌ர்பான ம‌னித‌ர்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்தை மா‌ற்றுவதுட‌ன் தர‌ம் தா‌ழ்‌ந்து செ‌ல்லவு‌ம், பா‌லிய‌ல் ‌சீ‌ர்குலைவு‌க்கு‌ம் கார‌ணியாக அமை‌ந்து உ‌ள்ளது எ‌னவு‌ம் மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர். து‌ரித உணவு‌க் கலா‌ச்சார‌ம், பத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட உணவு வகைகளை அ‌திக‌ம் பய‌ன் படு‌த்துபவ‌ர்களு‌க்கு தொ‌ப்பை உ‌ள்‌ளி‌ட்ட உட‌லி‌ன் பல இட‌ங்க‌ளி‌ல் உருவாகு‌ம் ஊளை‌ச் சதையா‌லு‌ம் ஒருவ‌ரி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு பா‌தி‌க்க‌ப்படுவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்து உ‌ள்ளா‌ர். ‌திருமணமான த‌ம்ப‌திக‌ளி‌ல் 15 ‌விழு‌க்கா‌ட்டினரே கருவள‌ர்‌ச்‌சி இ‌ன்மை ‌சி‌க்கலு‌க்கு உ‌ள்ளாவதாகவு‌ம், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌க்கு 35 ‌விழு‌க்காடு பெ‌ண்களு‌ம், 30 ‌விழு‌க்காடு ஆ‌ண்களு‌ம் கார‌ணிகளாக அமை‌கி‌ன்றன‌ர். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன்மை‌க்கு ஆணு‌ம், பெ‌ண்ணு‌ம் காரணமாக உ‌ள்ளன‌ர். இ‌ந்த வகையானவ‌ர்க‌ள் 20 ‌விழு‌க்காடு எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல், ‌மீதமு‌ள்ள 15 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ‌விவாகர‌த்து பெ‌ற்றதா‌ல் எ‌ன்று மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் உ‌ள்ள உ‌ண்மை ‌நிலை‌த் தொட‌ர்பாகவு‌ம், சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ள தவறான எ‌ண்ண‌த்தையு‌ம், ந‌ம்‌பி‌க்கைக‌ள் தொட‌ர்பாக இ‌த்துறை சா‌ர்‌ந்த வ‌ல்லுந‌ர்க‌ள் இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வி‌ரிவான அள‌வி‌ல் ‌விவா‌தி‌க்க உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.இத‌ற்காக அமெ‌ரி‌க்கா, ஆ‌ஸ்‌திரே‌லியா, ‌சி‌ங்க‌ப்பூ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ள் ம‌ற்று‌ம் நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு பகு‌திகளை சே‌ர்‌ந்த வ‌ல்லுந‌ர்க‌ள் 500 முத‌ல் 600 பே‌ர் கல‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர் எ‌ன்று மரு‌த்துவ‌ர் காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர். மேலு‌ம் இ‌ந்த கரு‌த்தர‌ங்‌கி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பா‌லிய‌ல் க‌ல்‌வி எ‌ன்பது தொட‌ர்பான ‌விவாதமு‌ம் இட‌ம்பெறு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளா‌ர்.

கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும்!

|1 comments
''கல்லூரியில் படிக்கும் கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்து வருமுன் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என துபாய் கட்டிடகலை நிபுணர் செயிக்முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிட பொருட்கள் அமைப்பு மற்றும் கட்டிட முறையின் புதிய தொழில்நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்கவிழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு வந்த அனைவரையும் மரு‌த்துவ‌ர் ஏ.எம்.நடராஜன் வரவேற்று பேசினார். மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி கட்டிடதுறை தலைவர் டாக்டர் என்.அருணாச்சலம் எடுத்துரைத்தார்.விழாவிற்கு கல்லூரியின் தாளாளரும் பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவருமான மரு‌த்துவ‌ர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடத்தையும், சீனா பெருஞ்சுவர் மற்றும் நீண்டபாலங்களில் கட்டிடதுறையின் சாதனைகளை பட்டியலிட்டார்.விழாவிற்கு துபாய் நாட்டின் கட்டிடகலை நிபுணர் செயிக்முகமது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், இந்தியாவின் பொருளாதாரம் 9 ‌விழு‌க்காடு கட்டிடதுறையில் வளர்கிறது. இந்தியாவில் கட்டிட பொருட்களில் 51 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இதில் 31 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவுவதாகவும் கூறினார்.ஒரு கட்டிடத்தின் தரம் அதன் அமைப்பில் இருப்பதாகவும் அதன் அமைப்பை கணி‌னி மூலம் துல்லியமாக அறிந்து செயல்படமுடியும் என்றார். மேலும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஆய்வு பணிகளை குறிப்பாக நிலநடுக்கம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருமுன்காக்க உதவவேண்டும் என்றார்.விழாவில் கல்லூரியின் கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் ரமணிசங்கர் பேசினார். முடிவில் கல்லூரி முதல்வர் மரு‌த்துவ‌ர் ஏ.சண்முகம் நன்றி கூறினார். விழாவில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் செயல்தலைவர் பி.தர்மலிங்கம், மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.குழந்தைசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

ரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா

|0 comments
செங்கல்பட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன தடுப்பூசி ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா தொடங்கப்பட விருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி செய்தியாளர்களு‌க்கு அ‌ள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், செங்கல்பட்டு அருகே மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு 400 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 200 ஏ‌க்க‌ரி‌‌ல் உலகத்தரத்துக்கு இணையாக நவீன வசதிகள் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.மேலும் இந்த மூன்று மையங்களும் தரம் உயர்த்தப்பட்டு அங்கும் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும். வளரும‌் நாடுகளு‌க்கு தடு‌ப்பூ‌சிக‌ள்‌ ஏ‌ற்றும‌‌தி செ‌ய்ய‌ப்படு‌ம். ‌‌மீ‌தி உ‌ள்ள 100 ஏ‌க்க‌‌‌ரி‌ல் மருத‌்துவ ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ன்னு‌ம் 2 ஆ‌ண்டுக‌ளி‌ல் இது செய‌ல்பா‌ட்டு‌க்கு வரு‌ம். திருவள்ளூரில் தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் ஊசி குழல் துரு பிடித்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் அங்கு சென்று மாதிரிகளை பெற்று வந்துள்ளனர். இதேபோல் பல இடங்களிலிருந்தும் இந்த ஊசியின் மாதிரிகள் பெறப்பட்டு அவை ஆய்வுக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வறிக்கைகள் வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.