19 May 2008

போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்

போனில் "139" டயல் செய்தால் ரயில்வே தகவல் சேவை கிடைக்கும். அதுபோல விரைவில் தரப்படவுள்ள எண்ணை டயல் செய்தால், வீடு தேடி ரயில் டிக்கெட் வந்து சேரும்.
இந்த திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்கிறது ரயில்வே. அதற்காக இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி.) தீவிர கவனம் செலுத்தி வருகிறது. "டயல் எ டிக்கெட்" என்ற பெயரில் இந்த சேவை அறிமுகமாகும். இப்போது அது ரயில்வே நிர்வாகத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது.
போன் செய்து டிக்கெட்டை வீடு தேடிப் பெறும் வசதியில் ஏற்படக்கூடிய தடங்கல்கள், தவறுகள் பற்றியும், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது பற்றியும் ஆராயப்படுவதாக டெல்லியில் ஐ.ஆர்.சி.டி.சி. உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் "டயல் எ டிக்கெட்" வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது முதல்கட்டமாக டயல் செய்து, டிக்கெட்டை வீட்டில் பெறும்போது பணம் செலுத்த வேண்டும்.
பிறகு, அது கிரெடிட் கார்டுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த வசதிக்காக ரயில்வேயின் விசாரணை போன் எண் "139" போல அதற்கு பக்கத்து எண் ஒன்றை ஒதுக்குமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பித்துள்ளோம் என்றார் அவர்.
இப்போது "139"க்கு டயல் செய்து ரயில் வருகை, புறப்பாடு, பயண நேரம், டிக்கெட்டின் நிலை, கட்டணம், இருக்கை வசதி ஆகிய விசாரணைகள் செய்யலாம்.
டயல் எ டிக்கெட் எண் முற்றிலும் போன் மூலம் டிக்கெட் புக் செய்வதற்கு மட்டுமே ஒதுக்கப்படும். ரயில்வே கூடுதல் சேவையில் இது வரவேற்பை பெறும் என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

0 comments: