3 June 2008

கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!

ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...
திட்டமிடல்!
'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்?' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்? குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
போனது போகட்டும்... இனியாவது தெளிவாகத் திட்டமிடுவோம்.
வருமானம் எவ்வளவு... செலவு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்
சூழ்நிலையில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் எவ்வளவு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்தாக வேண்டும். இன்றைக்கு முப்பது வயதில் இருக்கும் ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையைக் கல்லூரியில் சேர்க்கும்போது அவருக்கு ஐம்பதை நெருங்கும் வயதாகி இருக்கும். அன்றைக்கு லட்சங்கள் தேவைப்படும் என்றால் எங்கே போகமுடியும். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாம் அல்லவா!


அதற்கான முயற்சிதான் இது.


ஒற்றை வரியில் திட்டமிட வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லமுடியாது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக திட்டமிட வேண்டும். எந்த வயதுப் பிரிவினருக்கு எந்த அளவு ஒதுக்கீடு என்பதை வைத்துதான் அவருடைய எதிர்காலம் சுகமான பயணமாக அமைய வழிகாட்ட முடியும்.


உதாரணமாக, 25 வயதில் உள்ளவர் அதிக ரிஸ்க் எடுக்கமுடியும். அதனால், ரிஸ்க் உள்ள பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைச் செய்யமுடியும். இப்போது இழந்தாலும் அதனை மீண்டும் சம்பாதிக்கும் திறனும், வயதும் உள்ளது. அதுவே 55 வயதுள்ளவர் இந்த ரிஸ்க்கை எடுக்கமுடியாது. இதுவரை சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பாகவும் அதேசமயம் ஓரளவு வருமானம் உள்ள திட்டமாகவும் தேர்வு செய்யவேண்டும்.


வெறுமே இந்தத் திட்டத்தில் இந்த அளவு பணத்தை போட்டு வையுங்கள் என்று பொத்தாம் பொதுவாக வழிகாட்டாமல், முதலீட்டில் உள்ள ரிஸ்க், அதில் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன், அது குறைந்தால் முதலீட்டுத் திட்டமிடலை மாற்றிஅமைக்க வேண்டிய விதம் என்று சகல திசைகளிலும் வழிகாட்டுகிறார் மகாதேவன்.
திட்டமிடுதலுக்கு முன்னரே சில விஷயங்களை நாம் செய்து முடித்திருக்க வேண்டும். அதில் முக்கியமானது இன்ஷ¨ரன்ஸ்.


அடிப்படைத் தேவையான டேர்ம் பாலிசிகளும் மெடிக்ளைம் பாலிசிகளும் எடுத்துக்கொண்ட பிறகு அதற்குச் செலவிடும் பிரீமியத் தொகை போக, மீதமுள்ள தொகைக்குத்தான் நிதித் திட்டமிடலைச் செய்யவேண்டும்.


இந்தத் திட்டமிடல் பட்டியலைப் படித்து முடிக்கும்போது, இருப்பதிலேயே அதிக ரிட்டர்ன் தரக்கூடிய முதலீடான ரியல் எஸ்டேட் பற்றிச் சொல்லப்படவே இல்லையே என்று தோன்றலாம். ஆனால், மாதாமாதம் முதலீடு செய்யும் வகையில் சொல்லப்படும் இந்த நிதித் திட்டமிடலில் ரியல் எஸ்டேட் முதலீட்டைச் சேர்க்க வழியில்லை. அது மொத்தமாகச் செய்யப்பட வேண்டிய முதலீடு. எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட் வரும்போது அதில் முதலீட்டைச் செய்து பயன் அடையலாம்.


ஒருவர் 25 வயதில் முதலீடுகளை ஆரம்பித்துவிடுவது நல்லது. அப்போதிலிருந்து சிறிய தொகையைச் சேமித்தாலே அதிக வருமானத்தைப் பெறமுடியும். அதுவே 35 வயதில் தொடங்கினால் ரிஸ்க் கொஞ்சம் அதிகரிக்கும். கிடைக்கும் தொகையும் குறைவாகவே இருக்கும். அதுவே 45 வயதில் தொடங்கினால் முதலீட்டுக்கலவையில் கடன் திட்டங்களே அதிக சதவிகிதம் இடம் பிடிக்கும். அதனால் அதிக வருமானம் கிடைப்பது அரிதாகிவிடும்.


அடுத்ததாக ஒரு முதலீட்டுக்கலவையைத் தேர்வு செய்துவிட்டு அதையே காலம் முழுவதும் வைத்திருக்கக்கூடாது. சிலசமயம் சில முதலீடுகள் எதிர்பார்த்த அளவு வருமானத்தைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நிதி ஆலோசகர்களுடன் துணையுடன் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இந்த முதலீட்டுப் பழக்கத்தை தொடரவேண்டும். மாதா மாதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் முதலீட்டைப் பாதிக்காது. மேலும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு எளிதாகவும் இருக்கும்.


மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சேமிக்கமுடியும் என்பவருக்கான முதலீட்டு திட்டம் இது! பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் திட்டங்கள், கமாடிட்டி என கலந்து செய்வதால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமானம் 25, 35, 45 வயதில் இருக்கவேண்டிய முதலீட்டுக் கலவை சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. 8


ஈக்விட்டி முதலீடுகள்
அதிக வருமானம் தரும் ஈக்விட்டி முதலீடுகள். பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைவிட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. 300&க்கும் மேற்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சராசரியாக முப்பது சதவிகிதத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் கொடுக்கும் திட்டங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்யும் அளவை வயதுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.


25 வயதில் ஆரம்பிக்கும்போது 45 சதவிகிதமாகவும், அதுவே 35 வயது வரும்போது முதலீட்டை 40 சதவிகிதமாகவும் முதலீடு செய்ய வேண்டும். அதுவே 55 வயதாகும்போது 30 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்வது நல்லது.


கடன் திட்டங்கள்
கடன் திட்டங்களில் வங்கி டெபாசிட்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு கடன் பத்திரங்கள் என பல உள்ளன. இவை மிதமான ரிஸ்க் உள்ளவை. எனவே முதலீட்டில் ஒருபகுதியை இதுபோன்ற மிதமான ரிஸ்க் உள்ள திட்டங்களிலும் செய்வது நல்லது.


வயது குறைவாக இருக்கும்போது கடன் திட்டங்களில் குறைவான சதவிகிதமும், வயது அதிகமாகும்போது அதிக சதவிகிதமும் முதலீடு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


கமாடிட்டி
தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வதும் அவசியம். தங்கத்தை நகைகளாகவோ அல்லது நாணயங்களாகவோ முதலீடு செய்யலாம். இவற்றின் வருமானம் குறைவு என்றாலும் எளிதாக விற்று பணமாக்கும் வசதி இருக்கிறது. இதுதவிர, தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் வந்துவிட்டன. இவற்றிலும் முதலீடு செய்யலாம். இவை நேரடியாகத் தங்கத்தை வாங்குவதை விட பாதுகாப்பானது. இந்த வசதிகள் எல்லாம் இருந்தாலும் முதலீட்டை எப்போதும் பத்து சதவிகிதமாக வைத்துக்கொள்வது நல்லது.


கோடீஸ்வரர் ஆக வாழ்த்துக்கள்!


குறிப்பு: பங்கு சார்ந்த திட்டங்களின் எதிர்கால வருமானம் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாது. முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் 15% என்ற பாதுகாப்பான அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளது.
கடன் திட்டங்களில் வரி எடுத்துக்கொள்ளப்படவில்லை. வரிவிதிப்பு தனிநபர் வருமானத்துக்கு ஏற்ப மாறுபடும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் வருமானம் அனைத்தும் கடந்த காலத்தில் கொடுத்துள்ளவை. இதுவே வரும் காலத்திலும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே திட்டங்களைத் தேர்வு செய்யும் முன் நிதி ஆலோசகர்களைக் கலந்து உங்களுக்கு ஏற்ற முதலீடுகளாகத் தேர்வு செய்வது நல்லது.

நன்றி, விகடன்.

1 comments:

  • Tech Shankar says:
    27 April 2009 at 7:16 pm

    OOps.

    இன்னைக்கு சோத்துக்கே வழிய காணோம். நாளைக்கு எங்கன போகி சேமிக்கிறது.. oops